ரஜினியின் 'ஜெயிலர் 2' படத்தில் பவன் கல்யாண் நடிக்கிறாரா?
செய்தி முன்னோட்டம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில், ஆந்திர துணை முதல்வர் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மையல்ல எனத் தெரியவந்துள்ளது. பவன் கல்யாண் 'ஜெயிலர் 2' படத்தில் ரகசியமாக நடித்து முடித்துவிட்டதாக தமிழ் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டன. இது குறித்து Gulte செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி பவன் கல்யாணுக்கு நெருக்கமான வட்டாரங்களிடம் விசாரித்தபோது, அந்தத் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்று அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். படக்குழுவினர் அவரை அணுகியது உண்மைதான் என்றாலும், அவரது அரசியல் காரணங்களால் அந்தப் பேச்சுவார்த்தை இறுதி வடிவம் பெறவில்லை என்று கூறப்படுகிறது.
சஸ்பென்ஸ்
நீடிக்கும் சஸ்பென்ஸ்
'ஜெயிலர்' முதல் பாகத்தில் சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் எனப் பல மொழிகளிலிருந்து முன்னணி நடிகர்கள் கௌரவ தோற்றத்தில் நடித்திருந்தனர். அதே பாணியில் இரண்டாம் பாகத்திலும் ஒரு மாஸ் நடிகரைத் திரையில் கொண்டுவர நெல்சன் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஷாருக்கான், நந்தமுரி பாலகிருஷ்ணா எனப் பலரது பெயர்கள் அடிபட்டாலும், அந்த ரகசியக் கதாபாத்திரம் யார் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஷாருக்கான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பவன் கல்யாண் குறித்த செய்திகளும் வதந்தி எனத் தெரியவந்துள்ளது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.