"மிரட்டி திருமணம் செய்து கொண்டார்": ஜாய் கிரிசில்டா குற்றச்சாட்டை மறுத்த மாதம்பட்டி ரங்கராஜ்
செய்தி முன்னோட்டம்
பிரபல சமையல்கலை நிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தன்னை மிரட்டி திருமணம் செய்துகொண்டதாக கூறி, அவருக்கு எதிராக பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜாய் கிரிசில்டா அளித்த புகார் தொடர்பாக மகளிர் ஆணையத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட கருத்துக்கு பதிலடியாக இந்த அறிக்கை வந்துள்ளது. மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து திருமணம் செய்துகொண்டதையும், தான் அந்த குழந்தையின் தந்தை என ஒப்புக் கொண்டதாகவும் கூறி ஜாய் கிரிசில்டா தன்னுடைய instagram பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அறிக்கை
ஜாய் கிரிசில்டா பதிவிற்கு ரங்கராஜின் திட்டவட்ட மறுப்பு
மகளிர் ஆணையத்தில் நடந்தவை குறித்து மாதம்பட்டி ரங்கராஜ் கூறியுள்ளவை: "நான் ஜாய்யைத் தன்னிச்சையாக திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதைத் திட்டவட்டமாக கூறுகிறேன். தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக ஜாய் என்னை மிரட்டியதால், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டது," என்று ரங்கராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் செய்யப்பட்டு, தன்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை செப்டம்பர் 2025-ல் ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையப் புலனாய்வு அதிகாரி முன்பும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் தான் ஏற்கனவே விரிவான வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜீவனாம்சம்
DNA சோதனை மற்றும் ஜீவனாம்சம் கோரிக்கை
கமிஷனின் முன் நடந்த நடவடிக்கைகளின்போது, ஜாய் கிரிசில்டா தனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000/- பராமரிப்புத் தொகையாகவும், தனது பி.எம்.டபிள்யூ (BMW) காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர இ.எம்.ஐ-யையும் (EMI) செலுத்த வேண்டும் என்று கோரியதாக ரங்கராஜ் தெரிவித்துள்ளார். அந்தக் கோரிக்கையை தான் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். "நான் ஒருபோதும் DNA பரிசோதனையை மறுத்ததில்லை. அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளேன்," என ரங்கராஜ் கூறியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை என்றும், அந்தப் பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளார்.