LOADING...
"பேச்சுவார்த்தைக்கு தயார், போருக்கும் தயார்!": அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த நிபந்தனை
நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று காலிபாப் குறிப்பிட்டுள்ளார்

"பேச்சுவார்த்தைக்கு தயார், போருக்கும் தயார்!": அமெரிக்காவுக்கு ஈரான் விதித்த நிபந்தனை

எழுதியவர் Venkatalakshmi V
Jul 01, 2026
10:29 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ள முக்கிய கடமைகளை வாஷிங்டன் முழுமையாகச் செயல்படுத்தும் வரை, இறுதி உடன்படிக்கைக்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை ஈரான் தொடங்காது என்று அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகமது பாகர் காலிபாப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கத்தாரில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வரும் வேளையில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிபந்தனைகள்

அமெரிக்கா நிறைவேற்ற வேண்டிய முக்கிய நிபந்தனைகள்

அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் 13-வது பிரிவின்படி, சில முக்கிய நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று காலிபாப் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மற்றும் லெபனானில் மோதல்களை நிறுத்துவது, அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை முழுமையாக அகற்றுவது, ஹார்முஸ் ஜலசந்தியை படிப்படியாக மீண்டும் திறப்பது, ஈரானிய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் தடையற்ற ஏற்றுமதிக்கு அனுமதிப்பது மற்றும் முடக்கப்பட்டுள்ள ஈரானின் நிதி ஆதாரங்களை விடுவிப்பது ஆகிய கோரிக்கைகள் இதில் அடங்கும்.

கெடு

ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டணமில்லா பயணத்திற்கு 60 நாட்கள் மட்டுமே கெடு

வியூகம் மிகுந்த ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் இறையாண்மை நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய காலிபாப், ஒப்பந்தத்தின்படி இந்த ஜலசந்தி வழியாகக் கட்டணமின்றி கப்பல்கள் செல்ல 60 நாட்களுக்கு மட்டுமே தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இது ஈரானின் பிராந்திய எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், இந்த உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விதிகள் செயல்படுத்தப்படாவிட்டால் ஈரானிய ராணுவம் போருக்கும் தயாராக உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement