ரன்வீர் சிங் மீதான தடையா? பின்வாங்கிய பாலிவுட் கூட்டமைப்பு
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் 'டான் 3' திரைப்படத் தயாரிப்பு தரப்பிற்கு இடையே நீடித்து வந்த விவகாரத்தில், நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த 'ஒத்துழையாமை' உத்தரவை மேற்கு இந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (FWICE) உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. மும்பையில் கடந்த வாரம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நடிகர் ரன்வீர் சிங் இக்கூட்டமைப்பிற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து இந்த அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சுமுக முடிவு
திரைத்துறை அமைப்புகளின் கோரிக்கையால் சுமுக முடிவு
மும்பையில் இன்று (ஜூன் 3) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய FWICE தலைவர் பி.என். திவாரி, CINTAA, IMPPA மற்றும் இந்தியத் தயாரிப்பாளர்கள் கில்டு போன்ற முன்னணித் திரைத்துறை அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் என எவ்விதத் தரப்பிற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், அனைவரும் ஒன்றிணைந்து பேசி ஒரு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என இவவமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. இதில் யாரும் வெற்றியோ அல்லது தோல்வியோ அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விளக்கம்
இது 'தடை' அல்ல: அசோக் பண்டிட் விளக்கம்
இவ்விவகாரம் குறித்துப் பேசிய FWICE முதன்மை ஆலோசகர் அசோக் பண்டிட், ஊடகங்கள் 'தடை' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எந்தவொரு கலைஞருக்கும் தடை விதிக்கும் அதிகாரம் கூட்டமைப்பிற்கு இல்லை என்றும், ஒரு குறிப்பிட்ட நபருடன் இணைந்து பணியாற்ற வேண்டாம் என்று மட்டுமே தங்களது உறுப்பினர்களுக்கு அறிவுறுத்த முடியும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், ரன்வீர் சிங் திரையுலகிற்கு அளித்துள்ள பங்களிப்பைத் தாங்கள் மதிப்பதாகவும், இந்த விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பதில்
நீதிமன்ற நோட்டீஸிற்கு சட்டப்படி பதில் அளிக்கத் திட்டம்
ஒத்துழையாமை உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்ட போதிலும், ரன்வீர் சிங் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட சட்டப்பூர்வ நோட்டீஸிற்கு தங்களின் சட்டப்பிரிவு தகுந்த முறையில் பதில் அளிக்கும் என்று கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சுமுகமான தீர்வை நோக்கித் தற்போது பாலிவுட்டின் முன்னணித் திரைத்துறை அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருவதால், 'டான் 3' திரைப்படம் தொடர்பான இந்த உட்கட்சிப் பூசல் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.