இயக்குநர் பாரதிராஜா மறைவு: இன்று படப்பிடிப்புகள் ரத்து, அரசு மரியாதையுடன் தேனியில் இறுதிச்சடங்கு
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவை கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற புரட்சிகரமான இயக்குநர், 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா(84), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலை சென்னையில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியத் திரை உலகையும் ஆழந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் பாரதிராஜாவின் அரும்பெரும் கலைச் சேவையைப் போற்றும் வகையிலும், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையிலும், தமிழ் திரையுலகம் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கிறது. இதன்படி, இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துத் திரைப்பட மற்றும் சின்னத்திரை தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாகத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இறுதிச்சடங்கு
முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
மறைந்த மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பாரதிராஜாவின் இறுதிச் சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். திரையுலகப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு, அவரது உடல் சென்னை இல்லத்திலிருந்து அவரது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. குடும்பத்தினர் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேனி மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள அவரது சொந்த பண்ணை வீட்டில் இன்று (ஜூன் 11) மதியம் 3 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 'என் இனிய தமிழ் மக்களே' என்ற தனது கம்பீரக் குரலால் தமிழ் நெஞ்சங்களை வென்ற ஒரு சகாப்தம் இத்துடன் நிறைவு பெற்றுள்ளது.