ஜப்பான் தோல்வி எதிரொலி: அதிக திரையரங்குகளை கைப்பற்றும் ஜிகர்தண்டா டபுள்X
தீபாவளியையொட்டி கடந்த வாரம் வெளியான ஜிகர்தண்டா டபுள்X திரைப்படம், மேலும் 100 திரைகளில் திரையிடப்பட உள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சினிமாவில் நடிக்க ஆசைப்படும் சீசரும்(ராகவா லாரன்ஸ்), இயக்குனராக முயற்சிக்கும் கிருபாவிற்கும்(எஸ்ஜே சூர்யா) இடையே நடைபெறும் சம்பவங்கள் படத்தின் கதை. படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு எஸ்ஜே சூர்யாவை, 'தற்கால நடிகவேள்' என பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தீபாவளிக்கு வெளியான மற்றொரு படமான ஜப்பான் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில், அப்படத்தின் திரைகளை ஜிகர்தண்டா டபுள்X கைப்பற்றியது.