
போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது: தயாரிப்பாளர் மூலம் வந்த சிக்கல்; விரைவில் சிக்கப்போகும் மற்றொரு பிரபலம்
செய்தி முன்னோட்டம்
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது நீதிமன்றக் காவலில் ஜூலை 7ஆம் தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் திரையுலகிலும் அரசியல் வட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரோஜாக் கூட்டம், நண்பன், பூ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த ஸ்ரீகாந்த், கடந்த சில ஆண்டுகளாக சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து வந்தார். தற்போது 'தீங்கிரை' படத்தில் நடித்து வந்த நிலையில், இந்த வழக்கில் சிக்கியுள்ளார். விசாரணைச் செய்த காவல்துறையினரின் தகவலின்படி, கடந்த 5 ஆண்டுகளாக போதைப்பொருள் பழக்கத்தில் இருந்தவர் ஸ்ரீகாந்த். இவர் தொடர்ந்து கொக்கைன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தியதும், அவரது ரத்த பரிசோதனை மூலம் உறுதியாகியுள்ளது.
தயாரிப்பாளர்
தயாரிப்பாளர் மூலம் வந்த சிக்கல்
இந்த வழக்கில் முக்கியமாக முதலில் சிக்கியவர், 'தீங்கிரை' படத்தின் தயாரிப்பாளர் பிரசாத். இவரும் ஸ்ரீகாந்தும் கடந்த 3 ஆண்டுகளாக நெருக்கமான உறவில் இருந்ததாக தெரிகிறது. மே 29ஆம் தேதி பிரசாத், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரபல பப்பில் ஏற்பட்ட மோதலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டிருந்தார். அவரிடம் நடந்த விசாரணையில் கொக்கைன் பழக்கம் இருப்பதும், இது சர்வதேச கும்பலுடன் தொடர்புடையதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச கும்பலில், கானாவைச் சேர்ந்த ஜான், நைஜீரியாவைச் சேர்ந்த ஜூரிக் உள்ளிட்டோர் இருப்பது தெரிய வந்துள்ளது. ஜான், சென்னை மற்றும் பெங்களூரு வழியாக போதைப்பொருள் கடத்தலை செய்தவர். இக்கும்பல் 2020ஆம் ஆண்டு முதல் சென்னை வழியாக கொக்கைனை விநியோகம் செய்து வந்தது.
பிரபலம்
சிக்கப்போகும் மற்றொரு கோலிவுட் பிரபலம்?
பிரதீப் குமார் என்ற வியாபாரி, இந்த போதைப்பொருளை பெங்களூருவிலிருந்து வாங்கி, சென்னை தயாரிப்பாளர் பிரசாத் மூலமாக ஸ்ரீகாந்திடம் 40 முறை விற்றதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீகாந்த், Google Pay மூலமாக மட்டும் ரூ.4.72 லட்சம் வரை பரிவர்த்தனை செய்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 3 பாக்கெட் கொக்கைன் கைப்பற்றப்பட்டது. தற்போது காவலில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு நடிகர் — 'கழுகு' படத்தில் நடித்த கிருஷ்ணா — இன்னும் ஒரு முக்கியமான சந்தேகநபராக போலீசாரின் கண்களில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.