'விரைவில் ஃபிலைட் மீது தைய்யா தைய்யா பாடல்': மணிரத்னத்தை கலாய்த்த ஷாருக்கான்
பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான CNN News18 ஆண்டுதோறும், 'இந்தியன் ஆஃப் தி இயர்' விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான சிறந்த இந்தியருக்கான விருதை, ஷாருக்கானுக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அப்போது மேடை ஏறிய ஷாருக்கான், தான் கடந்த சில ஆண்டுகளாக தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த கடினமான சோதனைகளுக்கு இடையே, தன்னுடைய வேலையை முழு மனதுடனும், மனசாட்சிக்கு விரோதமின்றி, நேர்மையாக பணியாற்றியதற்கு கிடைத்த விருதாக இதை கருதுவதாக கூறினார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்,"இதே விழாவில் மணிரத்னம் கலந்து கொண்டுள்ளார். நீங்கள் இருவரும் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரே படத்தில் பணியாற்றி உள்ளீர்கள். அடுத்து எப்போது இணைவீர்கள்?" என கேட்டார்.
விரைவில் பிளேன் வாங்க போகிறேன்: ஷாருக்
அதற்கு ஷாருக், "மணி சார், இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது? இந்த விஷயம் இப்போது பொதுவெளிக்கு வந்து விட்டது. நான் தனியாக உங்களிடம் பலமுறை என்னை வைத்து ஒரு படம் இயக்குமாறு கேட்டிருக்கிறேன். கோரிக்கை வைத்திருக்கிறேன். இப்போது கெஞ்சி கேட்கிறேன். நீங்கள் சரி என்றால், ட்ரெயின் மீது என்ன, பிளேன் மீது கூட ஏறி, தைய்யா தைய்யா என ஆட தயார்" என கூறினார். உடனே மணிரத்னமும்,'நீங்கள் சொந்தமாக பிளேன் வாங்கும் போது, இயக்கிவிடலாம்' எனக்கூறினார். ஷாருக்கானும் விடாமல், "மணி, சமீபகாலமாக என்னுடைய படங்கள் எப்படி போகிறது என தெரியுமா? விமானம் வாங்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை, ஐ ஆம் கமிங்" என்றார்.