தவறவிட்டால் 3% வட்டி கட்ட வேண்டும்! செப்டம்பர் 15 அட்வான்ஸ் வருமான வரி செலுத்துவதற்கான கடைசி நாள்
செய்தி முன்னோட்டம்
2026-27 நிதியாண்டிற்கான இரண்டாம் தவணை அட்வான்ஸ் வருமான வரியை (Advance Tax) செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 15 ஆகும். குறித்த நேரத்திற்குள் வரியை செலுத்தி அபராதங்களைத் தவிர்க்குமாறு வருமான வரித்துறை வரி செலுத்துவோருக்கு நினைவூட்டியுள்ளது. TDS மற்றும் TCS கழிவுகளுக்குப் பிறகு ஒரு நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட வரிப் பொறுப்பு (Tax Liability) ₹10,000 அல்லது அதற்கு மேல் இருக்கும் நபர்கள் அனைவரும் இந்த அட்வான்ஸ் வருமான வரியை கட்டாயமாக செலுத்த வேண்டும்.
எவ்வளவு தொகை
செப்டம்பர் 15க்குள் எவ்வளவு தொகையை செலுத்த வேண்டும்?
அட்வான்ஸ் வருமான வரியானது ஒரே தவணையாக செலுத்தப்படாமல் ஆண்டுக்கு நான்கு தவணைகளாக பிரிக்கப்பட்டு செலுத்தப்படுகிறது.
ஜூன் 15க்குள் குறைந்தபட்சம் 15% தொகை செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
தற்போது செப்டம்பர் 15க்குள் மொத்த அட்வான்ஸ் வருமான வரியில் குறைந்தபட்சம் 45% தொகையை செலுத்தி முடிக்க வேண்டும்.
தொடர்ந்து டிசம்பர் 15க்குள் 75 சதவீதமும், மார்ச் 15க்குள் 100 சதவீதமும் அட்வான்ஸ் வருமான வரி செலுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அபராதம்
கடைசி நாளைத் தவறவிட்டால் விதிக்கப்படும் அபராதம் மற்றும் வட்டி
செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் 45% முன்பண வரியை செலுத்தத் தவறினாலோ அல்லது குறைவாக செலுத்தினாலோ வட்டி அபராதம் விதிக்கப்படும்.
வருமான வரிச் சட்டம் 2025-ன் பிரிவு 425-ன் (முந்தைய பிரிவு 234C) கீழ் மாதம் 1% வட்டி வீதம் கணக்கிடப்படும்.
செப்டம்பர் தவணைக் குறைபாட்டிற்கு 3 மாத காலத்திற்கு வட்டி கணக்கிடப்படுவதால், செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் சுமார் 3% வரை வட்டி அபராதமாக வசூலிக்கப்படும்.
சரியான நேரம்
பிரிவு 424 வட்டி விதிப்பும் சரியான நேரத்தில் வரி செலுத்துவதன் அவசியமும்
மேலும், ஒரு நிதியாண்டில் செலுத்தப்பட்ட மொத்த முன்பண வரி தொகையானது இறுதி வரிப் பொறுப்பில் 90 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தால், பிரிவு 424-ன் (முந்தைய பிரிவு 234B) கீழ் அடுத்த நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து மாதம் 1% வட்டி விதிக்கப்படும்.
எனவே, கூடுதல் வட்டி சுமையைத் தவிர்க்க விரும்பும் வரி செலுத்துவோர் செப்டம்பர் 15-க்குள் தங்களது 2-வது தவணை அட்வான்ஸ் வருமான வரியை செலுத்துவது அவசியமாகும்.