LOADING...
தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக பரவும் தகவல் உண்மையா? மத்திய அரசு விளக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த சமூக வலைதள வதந்திகளை மறுத்தது மத்திய அரசு

தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதாக பரவும் தகவல் உண்மையா? மத்திய அரசு விளக்கம்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 23, 2026
12:59 pm

செய்தி முன்னோட்டம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் என்று சமூக வலைதளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது போன்ற செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் பீதியையும் உருவாக்கும் உள்நோக்கம் கொண்டவை என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்துக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதற்கான எந்தவொரு திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. "இவை முற்றிலும் போலிச் செய்திகள். இத்தகைய தவறான செய்திகள் மக்களைத் திசைதிருப்பவும், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளன" என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

4 ஆண்டுகள்

கடந்த 4 ஆண்டுகளாக விலை உயர்வு இல்லை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் நிலவினாலும், இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் உயர்த்தப்படவில்லை என்பதை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் விலைகள் கடுமையாக உயர்ந்தபோதும், அந்தச் சுமை இந்தியப் பொதுமக்களின் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

அறிக்கை

கோடக் அறிக்கை கூறியது என்ன?

கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸ் வெளியிட்ட அறிக்கையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுத்திகரிப்பு நிலையங்கள் கடும் அழுத்தத்தைச் சந்திப்பதாகவும், பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.25 முதல் 28 வரை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தது. அரசு எண்ணெய் நிறுவனங்கள் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ. 270 பில்லியன் கூடுதல் சுமையைச் சுமப்பதாகவும், பெட்ரோல் மீதான கலால் வரியைக் குறைத்தது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது. தேர்தல் நடைபெறும் காலங்களில் இத்தகைய விலை மாற்றங்கள் அரசியல் உணர்திறன் காரணமாக நடைபெற வாய்ப்பில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

Advertisement