இனி பார்ம் 16 கிடையாது: பார்ம் 130 என்றால் என்ன? வருமான வரி கட்டுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் சம்பளம் பெறும் ஊழியர்களின் வருமான வரி ஆவணங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்த பார்ம் 16 Form 16) முறைக்கு விடை கொடுத்துவிட்டு, 2026-27 நிதியாண்டு முதல் பார்ம் 130 (Form 130) என்ற புதிய படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் சட்டத்திருத்தம் மற்றும் 2026 ஆம் ஆண்டின் வருமான வரி விதிகளின்படி இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிர்வாக மாற்றத்தின் முக்கிய நோக்கம், டிஜிட்டல் முறையில் வரி அறிக்கைகளைத் துல்லியமாகப் பராமரிப்பதும், ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் அரசின் டிஜிட்டல் பதிவுகளுடன் சரியாகப் பொருந்துவதை உறுதி செய்வதும் ஆகும்.
நடைமுறை
மாற்றத்திற்கான காலக்கெடு மற்றும் நடைமுறை
இந்த மாற்றம் உடனடியானது அல்ல என்பதை வரி செலுத்துவோர் கவனத்தில் கொள்ள வேண்டும். மார்ச் 2026இல் முடிவடைந்த நிதியாண்டிற்கு, வழக்கமான பார்ம் 16 படிவமே பயன்பாட்டில் இருக்கும். இது ஜூன் 2026க்குள் நிறுவனங்களால் வழங்கப்படும். புதிய பார்ம் 130 என்பது 2026-27 வரி ஆண்டிற்கான கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும். இதன்படி, முதல் முறையாகப் புதிய வடிவிலான பார்ம் 130 படிவங்கள் ஜூன் 15, 2027 அன்று வெளியிடப்படும். இந்த இடைவெளி நிறுவனங்களின் மென்பொருள் அமைப்புகளைப் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளப் போதிய கால அவகாசத்தை வழங்குகிறது.
முக்கிய பிரிவுகள்
பார்ம் 130ன் மூன்று முக்கியப் பிரிவுகள்
புதிய பார்ம் 130 படிவம் முந்தைய படிவத்தை விட மிகவும் விரிவானது மற்றும் மூன்று முக்கியப் பிரிவுகளாக (Part A, B, C) பிரிக்கப்பட்டுள்ளது. பகுதி A: இதில் பான் கார்டு, டான் எண் விபரங்கள் மற்றும் டிடிஎஸ் குறித்த தகவல்கள் இடம்பெறும். பகுதி B: ஊழியர்களின் சம்பள அமைப்பு, வரி விலக்குகள் மற்றும் வரி கணக்கீடுகள் குறித்த விபரங்களை இது உள்ளடக்கும். பகுதி C: மொத்த வருமானம், செலுத்த வேண்டிய வரி, வரிச் சலுகைகள் மற்றும் டிடிஎஸ்/டிசிஎஸ் மாற்றங்கள் குறித்த முழுமையான தணிக்கை விபரங்களை இது வழங்கும். இந்த தெளிவான கட்டமைப்பு பிழைகளைக் குறைக்கவும், வரித் தணிக்கையை எளிதாக்கவும் உதவும்.
டிஜிட்டல் முறை
கட்டாய டிஜிட்டல் முறை மற்றும் விரிவுபடுத்தப்பட்ட வரம்பு
பார்ம் 130ன் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், இனி கையால் எழுதப்பட்ட அல்லது மேனுவல் சான்றிதழ்கள் செல்லாது. நிறுவனங்கள் தங்களது காலாண்டு வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்த பிறகு, ட்ரேசஸ் (TRACES) போர்டல் மூலமாக மட்டுமே இந்த டிஜிட்டல் சான்றிதழைப் பெற முடியும். இது ஊழியர்களிடம் உள்ள ஆவணமும் அரசின் சர்வரில் உள்ள தரவுகளும் துல்லியமாக ஒத்துப்போவதை உறுதி செய்கிறது. மேலும், இந்த முறை தற்போது ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், வட்டி வருமானத்தை நம்பியிருக்கும் மூத்த குடிமக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கான வரிச் சான்றிதழ் முறை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
சவால்கள்
நிறுவனங்களுக்கான சவால்கள் மற்றும் பணியாளர் பாதுகாப்பு
புதிய முறை முழுக்க முழுக்க சிஸ்டம் மூலம் உருவாக்கப்படுவதால், நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளைத் தாக்கல் செய்வதில் ஏதேனும் தாமதம் செய்தால், ஊழியர்களால் பார்ம் 130ஐப் பெற முடியாது. இது நிறுவனங்களின் மனிதவள மற்றும் ஊதிய மேலாண்மைத் துறையினருக்கு ஒரு சவாலாக இருக்கும். இருப்பினும், இந்த மாற்றமானது வரி செலுத்தும் முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மாறாக, வரி விபரங்களைப் பதிவு செய்யும் விதத்தை சீரமைக்கிறது. ஊழியர்கள் தங்களது வரி பிடித்தம் சரியாகப் பதிவாகியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த இது ஒரு வலுவான கருவியாக அமையும்.