இன்று தவறவிட்டால் மானியம் ரத்து! எல்பிஜி சிலிண்டர் இ-கேஒய்சி முடிக்க இன்றே கடைசி நாள்
செய்தி முன்னோட்டம்
சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான ஆதார் சார்ந்த இ-கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க இன்று ஆகஸ்ட் 16 கடைசி நாளாகும். தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே அரசு வழங்கும் மானியங்கள் சென்று சேர்வதை உறுதிசெய்ய மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் இந்த நடவடிக்கையை கட்டாயமாக்கியுள்ளன. குறிப்பாக பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சலுகை பெறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பயோமெட்ரிக் சரிபார்ப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும்.
விளைவுகள்
கடைசி நாளுக்குள் முடிக்காவிட்டால் நேரிடும் விளைவுகள் என்ன?
இன்றைய கெடுவிற்குள் இ-கேஒய்சி முடிக்கத் தவறினால் உங்கள் எல்பிஜி இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்படாது.
ஆனால் உஜ்வாலா திட்ட பயனாளிகள் பெறும் ரூ.300 மானியத் தொகை ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது.
மேலும், பயோமெட்ரிக் சரிபார்ப்பு முடியும் வரை வீட்டு உபயோக மானிய விலையில் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியாமல், வர்த்தக ரீதியிலான கூடுதல் விலை கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கட்டாயம்
இ-கேஒய்சி சரிபார்ப்பு ஏன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது?
சமையல் எரிவாயு விநியோகத்தில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் கருப்புச் சந்தை விற்பனையைத் தடுப்பதற்காக மத்திய அரசு இந்த பயோமெட்ரிக் முறையைக் கொண்டுவந்துள்ளது.
தகுதியான நபர்களுக்கு மட்டுமே அரசிடமிருந்து நேரடியாக மானியம் சென்று சேர்வதை உறுதிசெய்ய இது உதவும்.
கடந்த மார்ச் மாதம் முதலே இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்காக ஆகஸ்ட் 16 ஆம் தேதியை இறுதி கெடுவாக எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ளன.
எப்படி செய்வது?
வீட்டிலிருந்தபடியே போன் மூலம் இ-கேஒய்சி செய்யும் வழிமுறை
எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு செல்லாமல் ஸ்மார்ட்போன் செயலி மூலமாகவும் பயனாளர்கள் இ-கேஒய்சி செய்யலாம்.
இதற்கு உங்கள் கேஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி (IndianOil One, Hello BPCL, அல்லது My HP Gas) மற்றும் 'Aadhaar FaceRD' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்னர் கணக்கில் உள்நுழைந்து 'e-KYC' தேர்வைத் தேர்ந்தெடுத்து, கேமரா மூலம் உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து வெற்றிகரமாகப் பதிவேற்றம் செய்யலாம்.
சரிபார்ப்பு
கேஸ் ஏஜென்சி மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் சரிபார்க்கும் முறை
ஆன்லைன் மூலம் செய்ய இயலாத பயணிகள் தங்களின் உள்ளூர் எல்பிஜி விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்றும் இ-கேஒய்சி முடித்துக் கொள்ளலாம்.
மேலும் சிலிண்டர் விநியோகம் செய்ய வரும் முகவர்களிடமும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே ஆதார் சரிபார்ப்பை வெற்றிகரமாக முடித்த வாடிக்கையாளர்கள் இந்த செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும், புதிய பயனாளர்கள் மட்டுமே விரைந்து முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.