இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ! ஜியோ பங்குகளை வெளியிட செபி பச்சைக்கொடி; முகேஷ் அம்பானியின் மெகா திட்டம்
செய்தி முன்னோட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைப் பிரிவான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தனது புதிய பங்கு வெளியீட்டைத் (ஐபிஓ) தொடங்குவதற்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடமிருந்து (செபி) அதிகாரப்பூர்வ ஒப்புதலைப் பெற்றுள்ளது. சுமார் ₹37,700 கோடி ($4 பில்லியன்) நிதியைத் திரட்ட இலக்கு வைத்துள்ள இந்த பங்கு வெளியீடு, இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய ஐபிஓவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வரைவு அறிக்கையை நிறுவனம் கடந்த ஜூன் 19 அன்று சமர்ப்பித்திருந்தது.
புராஜெக்ட் ஜூபிட்டர்
'புராஜெக்ட் ஜூபிட்டர்' திட்டமும் பங்குச் சந்தை மதிப்பும்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்த ஆண்டின் மிக முக்கியமான மதிப்பு உருவாக்க மைல்கல்லாக (Value Creation Milestone) ஜியோவின் இந்த பங்குப் பட்டியலிடலைக் குறிப்பிட்டுள்ளார்.
'புராஜெக்ட் ஜூபிட்டர்' (Project Jupiter) என்ற ரகசியக் குறியீட்டுப் பெயரில் மிக கவனமாகத் திட்டமிடப்பட்ட இந்த ஐபிஓ, ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மதிப்பை சுமார் ₹9.5 டிரில்லியன் (₹9.5 லட்சம் கோடி) அளவிற்கு உயர்த்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதி பயன்பாடு
திரட்டப்படும் ₹37,700 கோடி நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும்?
இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் தொகையிலிருந்து ₹27,500 கோடியை, அதன் துணை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் பெற்றுள்ள கடன்களை முன் கூட்டியே அடைப்பதற்கு பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மீதமுள்ள தொகை நிறுவனத்தின் பொதுவான பெருநிறுவனத் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும்.
இந்த வெளியீடு முழுவதும் புதிய பங்குகளாக மட்டுமே இருக்கும் என்பதால், திரட்டப்படும் முழு தொகையும் நிறுவனத்திற்கே நேரடியாகக் கிடைக்கும்.
ஒதுக்கீடு
சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு
இந்த பங்கு வெளியீட்டில் தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீதப் பங்குகளும், சில்லறை தனிநபர் முதலீட்டாளர்களுக்கு குறைந்தபட்சம் 35 சதவீதப் பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு குறித்த விவரங்களை நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு சந்தையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும்.