இந்தியாவுடன் கனடா உடன்பாடு! 11,000 டன் யுரேனியம் விநியோகிக்க மெகா ஒப்பந்தம்
செய்தி முன்னோட்டம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருக்கு இடையே புது தில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி மற்றும் தொழில்நுட்பத் துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 2023 ஆம் ஆண்டு நிலவிய அரசியல் கசப்புணர்வுகளைக் கடந்து, இரு நாடுகளும் தற்போது பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியான உறவை மீண்டும் பலப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் அணுசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான யுரேனியம் விநியோக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
வரலாற்றுச் சிறப்புமிக்க யுரேனியம் ஒப்பந்தம்
இந்தியாவின் அணுமின் உற்பத்தித் திறனை 2047 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட்டாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய வெளிநாடுகளில் இருந்து யுரேனியம் இறக்குமதி செய்வது அவசியமாகும். ஒப்பந்த விவரம் பின்வருமாறு: கனடாவின் கேமெகோ நிறுவனம், 2027 முதல் 2035 ஆம் ஆண்டு வரை சுமார் 2.2 கோடி பவுண்டு (11,000 டன்) யுரேனியத்தை இந்தியாவிற்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 2.6 பில்லியன் கனடிய டாலர்கள் (1.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும். இந்தியாவின் தற்போதைய அணுமின் உற்பத்தி வெறும் 8.8 ஜிகாவாட்டாக மட்டுமே உள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிட்டிக்கல் மினரல்ஸ்
கிரிட்டிக்கல் மினரல்ஸ் மற்றும் தூய்மையான எரிசக்தி
யுரேனியம் தவிர, கிரிட்டிக்கல் மினரல்ஸ் எனப்படும் முக்கியத் தாதுக்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. மின்சார வாகனங்கள், பேட்டரிகள் மற்றும் நவீனத் தயாரிப்புகளுக்குத் தேவையான லித்தியம், கோபால்ட் போன்ற தாதுக்களின் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கமாகும். மேலும், சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஆகியவற்றில் இணைய கனடா முடிவு செய்துள்ளது. இது தூய்மையான எரிசக்தி நோக்கிய இந்தியாவின் பயணத்தில் கனடாவின் பங்களிப்பை உறுதி செய்கிறது.
ஒத்துழைப்பு
தொழில்நுட்பம் மற்றும் விண்வெளித் துறை ஒத்துழைப்பு
எரிசக்தி மட்டுமின்றி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் மற்றும் விண்வெளித் துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளன. குறிப்பாக, இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்சிஎல், கனடாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து, 2030 ஆம் ஆண்டிற்குள் அங்குள்ள தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 75% உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் இயற்கையான பங்காளிகள் என்று பிரதமர் மோடி புகழ்ந்துள்ளார்.