LOADING...
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா தீவிரம்: உலகின் இரண்டாவது பெரிய வாங்குபவராக உருவெடுப்பு!
ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக உருவெடுப்பு

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா தீவிரம்: உலகின் இரண்டாவது பெரிய வாங்குபவராக உருவெடுப்பு!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 14, 2026
01:24 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச ஆற்றல் மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையமான சிஆர்இஏ வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருட்களை இறக்குமதி செய்வதல் உலக அளவில் இந்தியா தொடர்ந்து இரண்டாவது பெரிய நாடாக நீடித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியா ரஷ்யாவிடமிருந்து சுமார் ₹52,000 கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயுவை வாங்கியுள்ளது. உக்ரைன் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளுக்கு மத்தியிலும், இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களின் நாட்டின் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும், லாப வரம்பை அதிகரிக்கவும் மலிவு விலையில் கிடைக்கும் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை மிக அதிக அளவில் இறக்குமதி செய்து வருகின்றன.

மே மாதம் அதிகரிப்பு

மே மாதத்தில் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களின் அதிரடி உயர்வு

கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது, மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியானது 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு மட்டும் ஒரே மாதத்தில் 21 சதவீதம் என்ற அசாத்திய வளர்ச்சியைப் பெற்றுள்ளது. குஜராத்தில் உள்ள நயாரா எனர்ஜி நிறுவனத்திற்குச் சொந்தமான வாடினார் சுத்திகரிப்பு நிலையத்தின் எண்ணெய் இறக்குமதி 36 சதவீதமும், உலகப் புகழ்பெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் வளாகத்தில் 14 சதவீதமும் ரஷ்ய எண்ணெயின் வரத்து மிகக் கணிசமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள்

மீண்டும் கொள்முதலைத் தொடங்கிய பொதுத்துறை நிறுவனங்கள்

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் சர்வதேசப் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் தடைகள் குறித்த அச்சம் காரணமாக ரஷ்ய எண்ணெயை வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்த இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்கள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் கொள்முதலைத் தொடங்கின. அதன்படி, நியூ மங்களூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்கள் மார்ச் மாதம் முதல் தொடர்ந்து ரஷ்ய எண்ணெயை வாங்கி வருகின்றன. மே மாதத்தில் மட்டும் மங்களூர் நிலையம் 13 சதவீதமும், விசாகப்பட்டினம் சுத்திகரிப்பு நிலையம் 42 சதவீதமும் தங்களின் கொள்முதல் அளவை அதிரடியாக உயர்த்தியுள்ளன.

Advertisement

ஒடிசா

ஒடிசாவின் பாரதீப் நிலையத்தில் இரண்டு வருட உச்ச சாதனை

ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான பாரதீப் சுத்திகரிப்பு நிலையமும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்குத் தனது மிக உயர்ந்த அளவிலான ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியைப் பதிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற பிற பிராந்தியங்களில் இருந்தும் இந்தியா தற்பொழுது கச்சா எண்ணெயைத் தொடர்ந்து இறக்குமதி செய்து தன் தேவைகளைப் பன்முகப்படுத்தி வருகிறது. எனினும், இந்திய சுத்திகரிப்புச் சந்தையில் ரஷ்யாவின் மலிவு விலை எண்ணெய் மிக முக்கியப் பங்கைக் கொண்டுள்ளதை இந்த பாரதீப் நிலையத்தின் தரவுகள் மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

Advertisement

ஐரோப்பிய யூனியன் தடை

ஐரோப்பிய யூனியனின் தடைகளைத் தகர்த்த உலகளாவிய வர்த்தகம்

கடந்த ஜனவரி 21 முதல் ரஷ்ய கச்சா எண்ணெயைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்படும் பெட்டோலியப் பொருட்களை இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் கடுமையான தடை விதித்துள்ளது. இருப்பினும், மே மாதத்திலும் சில ஏற்றுமதிப் பொருட்கள் ஐரோப்பிய துறைமுகங்களைச் சென்றடைந்துள்ளன. இந்தியா, துருக்கி, புரூணை மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட சுமார் ₹5,700 கோடி மதிப்பிலான எரிபொருட்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதில் ரிலையன்ஸின் ஜாம்நகர் நிலையம் முக்கியப் பங்கு வகித்துள்ளது.

Advertisement