LOADING...
மூன்று மாதம் இஎம்ஐ கட்டவில்லை என்றால் வீடு ஏலத்திற்கு வந்துவிடுமா? வங்கியின் நடவடிக்கையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள்
ஹோம் லோன் இஎம்ஐயை தொடர்ந்து 3 முறை கட்டத்தவறும்போது செய்ய வேண்டியவை

மூன்று மாதம் இஎம்ஐ கட்டவில்லை என்றால் வீடு ஏலத்திற்கு வந்துவிடுமா? வங்கியின் நடவடிக்கையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள்

எழுதியவர் Sekar Chinnappan
Feb 26, 2026
06:24 pm

செய்தி முன்னோட்டம்

வீட்டுக் கடன் தவணையை (இஎம்ஐ) ஒரு மாதம் தவறவிடுவது என்பது பொதுவாக ஒரு பெரிய நெருக்கடியாகக் கருதப்படுவதில்லை. இந்த நிலையில் வங்கி உங்களுக்கு குறுஞ்செய்தி, மின்னஞ்சல் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் நினைவூட்டல்களை அனுப்பும். உங்கள் பணப்புழக்கத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் தற்காலிகமானதா என்பதை அறிய வங்கி முயற்சிக்கும். இந்தத் தவணையை அடுத்த மாதம் அபராதத் தொகையுடன் கட்டிவிட்டால், உங்கள் கணக்கு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

அபாய மணி

இரண்டாவது மாதத் தவணை: அபாய மணி

தொடர்ந்து இரண்டாவது மாதமும் நீங்கள் தவணையைச் செலுத்தத் தவறினால், உங்கள் கடன் கணக்கு ஓவர்ட்யூ பிரிவுக்கு மாற்றப்படும். இந்த நிலையில் வங்கியின் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரத் தொடங்கும். மிக முக்கியமாக, இந்தத் தகவல் சிபில் போன்ற கடன் தகவல் அமைப்புகளுக்குத் தெரிவிக்கப்படும். இதனால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையத் தொடங்கும், இது எதிர்காலத்தில் நீங்கள் மற்ற கடன்களைப் பெறுவதைப் பாதிக்கும்.

சட்ட நடவடிக்கை

மூன்றாவது மாதத் தவணை: சட்ட நடவடிக்கை மற்றும் என்பிஏ

தொடர்ந்து மூன்று மாதங்கள் இஎம்ஐ செலுத்தவில்லை என்றால், அது ஒரு இக்கட்டான நிலையை எட்டும். ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, 90 நாட்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கடன் கணக்குகள் வராக்கடன் என வகைப்படுத்தப்படும். இந்த நிலையில் வங்கி சர்பேசி சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமான நோட்டீஸை அனுப்பும். பொதுவாக 60 நாட்களுக்குள் நிலுவைத் தொகையைச் செலுத்த அவகாசம் வழங்கப்படும். அதற்குப் பிறகும் கட்டவில்லை என்றால், உங்கள் வீட்டை ஏலத்திற்கு விடும் பணிகளை வங்கி தொடங்க அதிகாரம் பெறுகிறது.

Advertisement

கிரெடிட் ஸ்கோர்

கிரெடிட் ஸ்கோர் மற்றும் கூடுதல் அபராதங்கள்

தொடர்ச்சியான தவணைத் தவறுகளால் உங்கள் கிரெடிட் ஸ்கோர் கடுமையாகப் பாதிக்கப்படும். ஒருமுறை சிதைந்த கிரெடிட் ஸ்கோரை மீண்டும் சீரமைக்கப் பல ஆண்டுகள் ஆகும். அதுமட்டுமின்றி, நிலுவைத் தொகைக்கு அபராத வட்டி விதிக்கப்படும். இதனால் உங்கள் ஒட்டுமொத்தக் கடன் சுமை எதிர்பாராத அளவிற்கு உயரும். எதிர்காலத்தில் நீங்கள் கடன் வாங்க நேர்ந்தால், வங்கிகள் அதிக வட்டி வசூலிக்கவோ அல்லது உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கவோ வாய்ப்புள்ளது.

Advertisement

எளிய வளிகள்

சிக்கலில் இருந்து தப்பிக்க எளிய வழிகள்

உங்களால் தவணையைச் செலுத்த முடியாது என்ற சூழல் ஏற்பட்டால், வங்கியிடமிருந்து நோட்டீஸ் வரும் வரை காத்திருக்க வேண்டாம். நீங்களாகவே வங்கி அதிகாரிகளை அணுகி உங்கள் நிதி நெருக்கடியை சொல்லலாம். வங்கியானது கடனை மறுசீரமைப்பு செய்யவோ, கடன் காலத்தை நீட்டிக்கவோ அல்லது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அவகாசம் தரவோ வாய்ப்புள்ளது. வங்கியுடன் முறையான தொடர்பில் இருப்பது, உங்கள் வீட்டைப் பாதுகாப்பதற்கும் சட்டச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் உதவும்.

Advertisement