இரண்டாவது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றார் கூகுள் துணை நிறுவனர் செர்கே பிரின்
செய்தி முன்னோட்டம்
தன்னுடைய இரண்டாவது மனைவி நிகோல் ஷனஹானுடனான , கூகுளின் துணை நிறுவனரான செர்கே பிரின்னின் விவாகரத்து நடவடிக்கைகள் முடிவடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
உலகின் முன்னணி எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் நிறுவனரும், செர்கே பிரின்னின் நீண்ட கால நண்பருமான எலான் மஸ்க்குடன், நிகோல் ஷனஹான் தொடர்பில் இருந்ததாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்துது.
இந்த செய்தி வெளியான சில மாதங்களுக்குப் பின்பு நிகோலும், செர்கே பிரின்னும் பிரிந்து வாழத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு நிகோல் ஷனஹானுடனான மணவாழ்வை முடித்துக் கொள்ள விவாகரத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார் செர்கே பிரின்.
உலகம்
குற்றச்சாட்டை மறுத்த நிகோல் ஷனஹான் மற்றும் எலான் மஸ்க்:
மேற்கூறிய குற்றச்சாட்டை நிகோல் ஷனஹான் மற்றும் எலான் மஸ்க் ஆகிய இருவருமே மறுத்திருக்கின்றனர். நிகோல் தன்னுடைய நண்பர் எனவும், அவரை சில முறை மட்டுமே சந்தித்திருப்பதாகவும் அப்போதே எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் எலான் மஸ்க்.
தற்போது பிரின் மற்றும் ஷனஹான் ஆகிய இருவரும் விவாகரத்துப் பெற்றிருக்கும் நிலையில், அவர்களுடைய நான்கு வயது மகளின் உரிமையை இருவருமே பகிர்ந்து கொள்ளவிருக்கிறார்கள்.
இருவருக்குமிடையேயான விவாகரத்து வழக்கின் போது, விவாகரத்திற்கு மறுப்பு தெரிவிக்காத நிகோல் ஷனஹான், செர்கே பிரின்னிடமிருந்து ஜீவனாம்சம் மட்டும் கோரியதாகக் கூறப்படுகிறது.
50 வயதான செர்கே பிரின், தற்போது 118 பில்லியன் டாலர்கள் சொத்துமதிப்புடன், உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். 34 வயதான நிகோலே ஷனஹான் கலிபோர்னியாவில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.