Loading...
'100% தூய்மை எனப் பொய் விளம்பரம்': டாபர் பொருட்களுக்கு தடை விதித்த FSSAI
நுகர்வோரை ஏமாற்றும் வகையில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்களே இந்நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாகும்

'100% தூய்மை எனப் பொய் விளம்பரம்': டாபர் பொருட்களுக்கு தடை விதித்த FSSAI

எழுதியவர் Venkatalakshmi V
Aug 04, 2026
11:41 am

செய்தி முன்னோட்டம்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), முன்னணி நுகர்பொருள் உற்பத்தி நிறுவனமான டாபர் இந்தியா லிமிடெட் தயாரிக்கும் பல்வேறு உணவுப் பொருட்களின் விற்பனைக்கு உடனடியாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அப்பொருட்களின் பேக்கிங் மற்றும் விளம்பரங்களில் "100 சதவீதம் தூய்மையானது" என நுகர்வோரை ஏமாற்றும் வகையில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்களே இந்நடவடிக்கைக்கு முக்கியக் காரணமாகும்.

சர்ச்சை

'100%' விளம்பர சர்ச்சையும் விதிமீறல்களும்

டாபர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேன், ஆப்பிள் சிடர் வினிகர், தூய்மையான தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், பசும்பால் நெய், இளநீர் மற்றும் தேங்காய்ப்பால் போன்ற பல பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன.

இத்தயாரிப்புகளில் "100% இயற்கை", "100% தூய்மையானது", "100% ஆர்கானிக்" மற்றும் "100% உத்தரவாதம்" போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இத்தகைய சொற்றொடர்கள் தெளிவற்றவை, நிரூபிக்க முடியாதவை மற்றும் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக் கூடியவை என FSSAI தெரிவித்துள்ளது.

கண்டுபிடிப்பு

FSSAI கண்டறிந்த பிரதான தவறுகள்

ஆய்வின் போது டாபர் நிறுவனத்தின் தயாரிப்புகளில் பின்வரும் முக்கிய விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

'டாபர் ஹிமாலயன் ஆர்கானிக் ஆப்பிள் சிடர் வினிகர்' மற்றும் 'டாபர் ஆர்கானிக் தேன்' ஆகியவற்றில் செல்லுபடியாகும் எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஆர்கானிக் சான்றிதழ் இன்றி 'ஜெயவிக் பாரத்' (Jaivik Bharat) லோகோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

'டாபர் ஹோம்மேட் தேங்காய்ப்பால்' தயாரிப்பில் "100% தூய்மை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பு விளம்பர விதிகளின்படி கலப்பு அல்லது கூட்டு உணவு பொருட்களுக்கு இத்தகைய உரிமை கோரல்களுக்கு அனுமதி இல்லை.

ADVERTISEMENT

விளக்கம்

எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ கெடு மற்றும் டாபர் விளக்கம்

கடந்த மே 2025-இல் "100%" எனக் குறிப்பிடும் விளம்பரங்களை தவிர்க்குமாறு உணவு நிறுவனங்களுக்குப் பொதுவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தன.

டாபர் நிறுவனத்திற்கு ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டும் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், தற்போது இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட தயாரிப்புகளின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறும், 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து விளக்கமளித்துள்ள டாபர் நிறுவனம், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ அனுப்பிய நோட்டீஸை பெற்றுள்ளதாகவும், இணையதளத்தில் உள்ள தகவல்களைச் சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT