EPFO-வின் 'ஊழியர்கள் சேர்க்கை திட்டம் 2026': பிஎஃப் இல்லா ஊழியர்களுக்கு பொன்னான வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
ஏப்ரல் 1, 2009 முதல் மார்ச் 31, 2026 வரையிலான காலகட்டத்தில் பணியில் சேர்ந்து, சட்டப்பூர்வமாக பிஎஃப்(PF) தகுதி இருந்தும் அதிலிருந்து விடுபட்ட சம்பள பணியாளர்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) ஒரு சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது. 'ஊழியர்கள் சேர்க்கை திட்டம் 2026' என்ற இந்த முயற்சி மூலம் முதலாளிகள் தங்களின் விடுபட்ட ஊழியர்களைத் தன்னார்வத்துடன் இதில் இணைத்துக் கொள்ள முடியும்.
பயனாளர்கள்
யாரெல்லாம் பயனடைய முடியும்?
கடந்த 17 ஆண்டுகளில் பிஎஃப் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படாத தகுதியுள்ள தொழிலாளர்கள் இத்திட்டம் மூலம் ஓய்வூதியம், பிஎஃப் மற்றும் காப்பீட்டு பலன்களை பெறலாம்.
ஆனால், இச்சலுகையை பெற ஊழியர் தற்சமயம் அதே நிறுவனத்தில் பணியில் தொடர வேண்டும் மற்றும் உயிருடன் இருக்க வேண்டும்.
ஏற்கனவே வேலையை விட்டு விலகிய முன்னாள் ஊழியர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
மேலும், கடந்த காலத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் பிஎஃப் தொகை பிடிக்கப்படாமல் இருந்தால், அத்தொகையைச் செலுத்துவதிலிருந்து ஊழியர்களுக்குச் சிறப்பு விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
நடைமுறை
பதிவு செய்யும் நடைமுறை
முதலாளிகள் தங்களின் தகுதியுள்ள ஊழியர்களுக்கு UMANG செயலி மூலம் முக அங்கீகாரக் கட்டமைப்பு சார்ந்த 'UAN' எண்ணை உருவாக்க வேண்டும்.
அதன்பின், சட்டப்பூர்வ பங்களிப்புகளை மின்னணு முறை (ECR platform) மூலம் செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தங்களின் ஊதியப் பதிவேடுகளை உள் தணிக்கை செய்து தகுதியான நபர்களைக் கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
தாங்கள் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் எனச் சந்தேகிக்கும் ஊழியர்கள், உடனடியாகத் தங்களது நிறுவனத்தின் HR பிரிவைத் தொடர்பு கொண்டு, ஏப்ரல் 2009 முதல் மார்ச் 2026 வரையிலான காலத்தில் தங்களின் தகுதியை உறுதிசெய்து அக்டோபர் 31, 2026-க்குள் தங்களைப் பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.