LOADING...
இபிஎஃப்ஓ 3.0: பிஎஃப் பணத்தை 100% முழுமையாக எடுக்க முடியுமா? புதிய விதிகள் மற்றும் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் முறை
100% பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான புதிய விதிகள்

இபிஎஃப்ஓ 3.0: பிஎஃப் பணத்தை 100% முழுமையாக எடுக்க முடியுமா? புதிய விதிகள் மற்றும் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் முறை

எழுதியவர் Sekar Chinnappan
May 28, 2026
02:11 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, பிஎஃப் சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் இருந்து யுபிஐ தொழில்நுட்பம் மூலம் நேரடியாக வங்கி கணக்கிற்குப் பணம் எடுக்கும் இபிஎஃப்ஓ 3.0 வசதி விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்கான மென்பொருள் சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதால், இனி பிஎஃப் பணத்தைப் பெற நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சந்தாதாரர்கள் தங்களது யுஏஎன் (UAN) எண்ணுடன் இணைக்கப்பட்ட யுபிஐ பின் (UPI PIN) எண்ணைப் பயன்படுத்தி, மிகக் குறைந்த நேரத்தில் டிஜிட்டல் முறையில் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

முழுப் பணம் எடுக்கும் விதி

கணக்கில் இருந்து 100% பணத்தையும் முழுமையாக எடுக்க அனுமதிக்கும் பிரத்யேகக் கட்டுப்பாடுகள்

பணியில் இருக்கும் ஒரு ஊழியர், இபிஎஃப்ஓ 3.0 திட்டத்தின் கீழ் அவசரத் தேவைகளுக்காகத் தனது பிஎஃப் கணக்கில் இருந்து 100% தொகையையும் முழுமையாக எடுக்க முடியாது. ஒரு சந்தாதாரர் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே, தனது கணக்கில் இருக்கும் 100% பிஎஃப் தொகையையும் முழுமையாகத் திரும்பப் பெற தகுதியுடையவர் ஆவார். இதுதவிர, ஒரு ஊழியர் தனது 58 வயதை எட்டி முழுமையான ஓய்வு பெறும் காலத்திலும், பிஎஃப் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் வட்டியுடன் சேர்த்து 100% அப்படியே எடுத்துக்கொள்ளலாம்.

பகுதிப் பணம் எடுக்கும் வரம்பு

யுபிஐ மற்றும் ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கான 75 சதவீத உச்ச வரம்பு மற்றும் லாக்-இன் விதி

நடப்பு பணியில் உள்ளவர்கள் அவசரக் காரணங்களுக்காக யுபிஐ அல்லது இபிஎஃப்ஓ வழங்கவுள்ள பிரத்யேக ஏடிஎம் கார்டுகள் மூலம் தங்களது மொத்த இருப்பில் 50% முதல் 75% வரை மட்டுமே எடுக்க முடியும். சந்தாதாரரின் எதிர்கால சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வூதிய நலனைக் கருத்தில் கொண்டு, மொத்தப் பணத்தில் குறைந்தபட்சம் 25% தொகையானது எப்போதுமே கணக்கில் இருக்க வேண்டும். அதேபோல், மருத்துவ அவசரம், திருமணம், கல்வி மற்றும் வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான தானியங்கி தீர்வு வரம்பு (Auto-settlement limit) 1 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

கேஒய்சி சரிபார்ப்பு

புதிய முறையில் பணம் எடுக்கப் பயனர்கள் தங்களது கணக்கில் உடனே அப்டேட் செய்ய வேண்டிய முக்கிய ஆவணங்கள்

பயனர்கள் எவ்வித தடையுமின்றி இந்த அதிவேக யுபிஐ பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்த, தங்களது யுஏஎன் கணக்கை முழுமையாகச் சரிசெய்து வைத்திருப்பது அவசியமாகும். இதன்படி, ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் ஆகியவை பிஎஃப் கணக்குடன் சரியாக இணைக்கப்பட்டு டிஜிட்டல் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஆதார் மற்றும் யுஏஎன் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்கள் ஒரே எண்களாகவும், அது பயன்பாட்டிலும் இருந்தால் மட்டுமே ஓடிபி சரிபார்ப்பு மூலமாக 24 மணி நேரத்திற்குள் பணம் வங்கி கணக்கிற்கு வரும்.

Advertisement