டன்கின் டோனட்ஸ் இந்தியாவுக்கு விடை கொடுக்கிறது: டிசம்பர் 2026க்குள் அனைத்துக் கடைகளும் மூடல்; காரணம் இதுதான்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னனி உணவகச் சங்கிலி நிறுவனமான ஜூபிலண்ட் புட்வொர்க்ஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற டன்கின் டோனட்ஸ் பிராண்டுடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று கையெழுத்திடப்பட்ட இந்த மல்டிபிள் யூனிட் டெவலப்மென்ட் பிரான்ச்சைஸ் அக்ரிமெண்ட், வரும் டிசம்பர் 31, 2026 அன்றுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள டன்கின் டோனட்ஸ் கடைகள் அனைத்தும் படிப்படியாக மூடப்படும் என்று ஒழுங்குமுறை தாக்கல் ஒன்றில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பின்னணி
ஒப்பந்தம் முறிவிற்கான காரணமும் நிர்வாகத்தின் முடிவும்
ஜூபிலண்ட் புட்வொர்க்ஸ் நிறுவனத்தின் வாரியம், டன்கின் பிராண்டை இந்தியாவில் தொடர்ந்து நடத்துவதற்கான மேம்பாட்டு உரிமைகளை நீட்டிக்க வேண்டாம் என்று ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. இதன்படி, தற்போதுள்ள டன்கின் கடைகளை ஆய்வு செய்து, அவற்றைப் பகுத்தறிவு செய்தல் அல்லது சில செயல்பாடுகளை முழுமையாக நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. சொத்துக்களை விற்பனை செய்தல் அல்லது பிரான்ச்சைஸ் உரிமைகளை மாற்றுதல் போன்றவையும் பிராண்ட் உரிமையாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை
ஜூபிலண்ட் புட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிலை
1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜூபிலண்ட் புட்வொர்க்ஸ் நிறுவனம், இந்தியா மட்டுமின்றி துருக்கி, வங்கதேசம், இலங்கை, அஜர்பைஜான் மற்றும் ஜார்ஜியா ஆகிய ஆறு நாடுகளில் 3,500க்கும் மேற்பட்ட உணவகங்களைக் கொண்டுள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள டோமினோஸ் மற்றும் வளர்ந்து வரும் பாப்பீஸ் போன்ற சர்வதேச பிராண்டுகளையும் இந்நிறுவனம் நிர்வகித்து வருகிறது. டன்கின் டோனட்ஸ் வெளியேறினாலும், மற்ற பிராண்டுகள் மூலமாகத் தனது வர்த்தகத்தை வலுப்படுத்த ஜூபிலண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சொந்த பிராண்டுகள்
சொந்த பிராண்டுகளில் கவனம் செலுத்தும் ஜூபிலண்ட்
சர்வதேச பிராண்டுகள் ஒருபுறம் இருக்க, ஜூபிலண்ட் நிறுவனம் தனது சொந்த பிராண்டுகளான 'ஹாங்ஸ் கிச்சன்' மற்றும் துருக்கியில் உள்ள 'காஃபி' போன்ற கஃபே பிராண்டுகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. டன்கின் டோனட்ஸ் மூலம் ஏற்பட்ட நஷ்டங்களைக் குறைத்து, லாபகரமான மற்ற பிராண்டுகளில் முதலீடு செய்வதே இந்த வெளியேற்றத்திற்கு ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. எனினும், டோனட் பிரியர்களுக்கு இந்தச் செய்தி ஒரு ஏமாற்றமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.