LOADING...
சிறு கார்களுக்கு சலுகை கிடைக்குமா? கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி! CAFE-III விதிகள் குறித்து அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
மத்திய அமைச்சகத்தின் CAFE-III விதிமுறைகள் பரிந்துரை பிரதமரின் அலுவலகத்திற்கு சென்றது

சிறு கார்களுக்கு சலுகை கிடைக்குமா? கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி! CAFE-III விதிகள் குறித்து அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 26, 2026
04:04 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் வாகனங்களின் எரிபொருள் பயன்பாடு மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள கார்ப்பரேட் சராசரி எரிபொருள் திறன் (CAFE) விதிமுறைகளின் மூன்றாம் கட்டம் (CAFE-III) குறித்த பரிந்துரைகள் பிரதமரின் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி நேற்று (பிப்ரவரி 25, 2026) தகவல் தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சகம், கார் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த இறுதிப் பரிந்துரை பிரதமரின் பார்வைக்கு சென்றுள்ளது.

மோதல்

கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே நிலவும் மோதல்

CAFE-III விதிமுறைகளை அமல்படுத்துவதில் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. குறிப்பாக, சிறிய ரக கார்களுக்கு விதிமுறைகளில் சலுகை அளிக்க வேண்டுமா என்பதில் டாடா மோட்டார்ஸ் மற்றும் மாருதி சுஸூகி நிறுவனங்கள் முரண்பட்டுள்ளன. சிறிய ரக கார்கள் ஏற்கனவே குறைந்த உமிழ்வைக் கொண்டவை என்பதால், அவற்றுக்கு எடை மற்றும் விலை அடிப்படையில் சில சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று மாருதி சுஸூகி வாதிடுகிறது. இது நடுத்தர வர்க்க மக்களின் வாங்கும் திறனைப் பாதிக்கும் என அந்நிறுவனம் கருதுகிறது. சிறிய கார்களுக்குச் சலுகை வழங்கினால், அது வாகனப் பாதுகாப்பு அம்சங்களில் சமரசத்தை ஏற்படுத்தும் என்றும், பசுமைப் புரட்சிக்கான முயற்சியை இது திசைதிருப்பும் என்றும் டாடா மற்றும் மஹிந்திரா கடுமையாக எதிர்த்து வருகின்றன.

விதிமுறைகள்

CAFE விதிமுறைகளின் நோக்கம் மற்றும் வரலாறு

இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு முதல் இந்த CAFE விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அனைத்து மாடல் வாகனங்களின் ஒட்டுமொத்த கார்பன்-டை-ஆக்சைடு உமிழ்வு சராசரி அளவை இது கட்டுப்படுத்துகிறது. CAFE-I: 2017 முதல் 2022 வரை அமலில் இருந்தது. CAFE-II: 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. CAFE-III: இது வரும் 2027 ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வாகனத் தயாரிப்பாளர்கள் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட என்ஜின்களை உருவாக்கவும், மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

Advertisement

அமலாக்கம்

அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் அமலாக்கம்

இந்தியாவின் ஆற்றல் திறன் பணியகம் (பிஇஇ) அமைப்பு இதற்கான வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அண்மையில் வெளியான தகவல்களின்படி, சிறிய கார்களுக்கு வழங்கப்படவிருந்த சில விலக்குகளை மின்சக்தி அமைச்சகம் நீக்கியுள்ளதாகத் தெரிகிறது. இது மாருதி சுஸூகி போன்ற நிறுவனங்களுக்குச் சவாலாக அமையலாம். பிரதமரின் அலுவலகம் இந்தப் பரிந்துரைகளை ஆய்வு செய்த பிறகு, இறுதி வழிகாட்டுதல்கள் வரும் மார்ச் மாத இறுதிக்குள் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது. இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு வாகனத்திற்கும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Advertisement