வெள்ளை மாளிகை அருகே 30 முறை முழங்கிய துப்பாக்கிச் சத்தம்! அதிபர் டிரம்ப் உள்ளே இருந்த போது பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குள் இருந்த சமயத்தில் அதன் வெளிப்பகுதி பாதுகாப்புச் சாவடி அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் இருந்த அமெரிக்க ரகசியப் பிரிவினர் நடத்திய அதிரடி எதிர்த் தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தத் திடீர் விபரீதத் தாக்குதலின் போது அதிபர் டொனால்ட் டிரம்ப் எவ்வித பாதிப்புமின்றிப் பாதுகாப்பாக உள்ளார் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கூடுதல் விபரங்கள் இங்கே:-
தாக்குதல்
பாதுகாப்புச் சாவடியில் நடந்த திடீர் தாக்குதல்
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை வளாகத்தின் 17வது தெரு சந்திப்பில் சனிக்கிழமை மாலை 6 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்புச் சாவடியை நோக்கி வந்த நாசிரே பெஸ்ட் என்ற வாலிபர் தனது பையிலிருந்து துப்பாக்கியை எடுத்து அதிகாரிகள் மீது சரமாரியாகச் சுடத் தொடங்கினார். அப்போது சுமார் 30 முறை துப்பாக்கி முழங்கும் சத்தம் கேட்டதாக அங்கிருந்த பாதுகாப்புப் படை சட்ட அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உடனடியாகச் செயல்பட்ட அதிகாரிகள் நடத்திய எதிர்த்தாக்குதலில் அந்த நபர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
செய்தியாளர்
பயத்தில் உறைந்த வெள்ளை மாளிகை செய்தியாளர்
இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்த துல்லியமான தருணத்தில் ஏபிசி நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் செலினா வாங் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென டஜன் கணக்கிலான துப்பாக்கிச் சத்தங்கள் பின்னணியில் கேட்கத் தொடங்கியதும் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாகத் தரையில் படுத்துத் தஞ்சமடைந்தார். இந்தத் திக் திக் நிமிடங்கள் அடங்கிய அவரது மொபைல் வீடியோ தற்பொழுது எக்ஸ் தளத்தில் வெளியாகி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
டிரம்ப் எதிர்கொள்ளும் தொடர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த சில வருடங்களாகவே தொடர்ச்சியான கொலை முயற்சி அச்சுறுத்தல்களைத் தன் வாழ்வில் எதிர்கொண்டு வருகிறார். கடந்த ஏப்ரல் 25, 2026 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற இரவு விருந்தின் போதும் டிரம்பைக் கொல்ல நடந்த உத்தேச முயற்சி முறியடிக்கப்பட்டது. மேலும் 2024 தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மேடையில் டிரம்ப் பேசிக்கொண்டிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவரது வலது காதில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.