LOADING...
அமைதி பேச்சுவார்த்தைக்கு நடுவே அமெரிக்கா திடீர் தாக்குதல்; ஈரானின் போர்க்கப்பல்களை சுக்குநூறாக உடைத்த அமெரிக்கா
ஈரானின் போர்க்கப்பல்களை சுக்குநூறாக உடைத்த அமெரிக்கா

அமைதி பேச்சுவார்த்தைக்கு நடுவே அமெரிக்கா திடீர் தாக்குதல்; ஈரானின் போர்க்கப்பல்களை சுக்குநூறாக உடைத்த அமெரிக்கா

எழுதியவர் Venkatalakshmi V
May 26, 2026
06:29 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில வாரங்களாகத் தற்காலிகப் போர் நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையிலும், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தென் ஈரானில் உள்ள ஈரானியப் படைகளின் ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்கு வைத்து அமெரிக்க ராணுவம் திங்கட்கிழமை அதிரடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனை அமெரிக்க மத்திய கட்டளையகம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது தங்களது படைகளைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட 'தற்காப்புத் தாக்குதல்' என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை

ஹார்முஸ் நீரிணையில் வெடித்த போர்

உலகளாவிய எரிசக்தி விநியோகப் பாதையான ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஈரானின் இரண்டு படகுகள் கடல் கண்ணிவெடிகளை வைக்க முயன்றதை அமெரிக்கப் படைகள் கண்டறிந்தன. இதனைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் அந்த இரண்டு ஈரானியக் கப்பல்களும் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. மேலும், ஈரான் கடலோரப் பகுதியான பண்டார் அப்பாஸ் என்ற இடத்தில் இருந்து ஈரானியப் படைகள் அமெரிக்கப் போர் விமானங்களை இலக்கு வைத்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த ஈரானின் மேற்பரப்பில் இருந்து வான்நோக்கிப் பாயும் ஏவுகணை தளத்தையும் அமெரிக்கப் படைகள் குண்டுவீசி அழித்தன. இந்த அதிரடித் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதிகளான பண்டார் அப்பாஸ், சிரிக் மற்றும் ஜாஸ்க் ஆகிய இடங்களில் பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

போர் நிறுத்தம்

போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறதா?

இந்தத் திடீர் தாக்குதல் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் முடிவுக்கு வரவில்லை என்று அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இது குறிப்பிட்ட எல்லைக்குள் நடத்தப்பட்ட தற்காப்பு நடவடிக்கை மட்டுமே என்றும், தற்போதைக்கு இந்தத் தாக்குதல்கள் நிறைவடைந்துள்ளதாகவும் அமெரிக்க மூட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

யுரேனியம்

"யுரேனியத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்": டிரம்ப்

மறுபுறம், இந்தத் தாக்குதலுக்கு நடுவிலும் ஈரானுடன் ஒரு நிரந்தர பிராந்திய அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார். இதுகுறித்து டிரம்ப் தனது 'டிரூத் சோசியல்' சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் தங்களின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உடனடியாக அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும். அது அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படும். அல்லது ஈரானுடன் இணைந்து சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் ஒரு ரகசிய இடத்தில் வைத்து அது முழுமையாக அழிக்கப்பட வேண்டும்" என்று நிபந்தனை விதித்துள்ளார். ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா நடத்தியுள்ள இந்தத் திடீர் ராணுவ நடவடிக்கை மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் மீண்டும் போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

Advertisement