Loading...
விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்பு! பிரதமர் மோடியை வரவேற்ற உஸ்பெகிஸ்தான் அதிபர்
பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தானில் உற்சாக வரவேற்பு

விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்பு! பிரதமர் மோடியை வரவேற்ற உஸ்பெகிஸ்தான் அதிபர்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2026
08:22 pm

செய்தி முன்னோட்டம்

இருதரப்பு உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) மாலை உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட் சென்றடைந்தார். விமான நிலையத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியை உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ் நேரில் வந்து கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார். அதிபரின் இந்த சிறப்பு நடைமுறைக்கு நன்றி தெரிவித்த மோடி, இது இரு நாடுகளுக்கு இடையிலான நட்பின் ஆழத்தைக் காட்டுகிறது எனக் குறிப்பிட்டார்.

பேச்சுவார்த்தை

வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு குறித்துத் தூதுக்குழு பேச்சுவார்த்தை

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும் அதிபர் மிர்சியோயேவ் இடையிலான தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதில் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, ஆற்றல் மற்றும் கல்வி உள்ளிட்ட முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் விக்சித் பாரத் 2047 மற்றும் யாங்கி உஸ்பெகிஸ்தான் 2030 ஆகிய இரு நாடுகளின் பகிர்ந்தளிக்கப்பட்ட வளர்ச்சிக்கான பார்வையை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசிக்கவுள்ளனர்.

நினைவிடங்கள்

சாஸ்திரி மற்றும் காந்தி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தத் திட்டம்

தாஷ்கண்டில் தங்கியிருக்கும் சமயத்தில், இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்திற்கும் பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளார்.

மேலும் தாஷ்கண்ட் மாநில அமைதியியல் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மையத்திற்கும் அவர் பார்வையிடவுள்ளார்.

பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு மேற்கொண்டுள்ள 4வது பயணம் இதுவாகும்.

கலாச்சார மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை இந்த நிகழ்வுகள் மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

உச்சி மாநாடு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26வது உச்சி மாநாட்டில் பங்கேற்பு

ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி கிர்கிஸ் குடியரசின் பிஷ்கெக் நகருக்குப் புறப்பட்டுச் செல்வார்.

அங்கு ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறவுள்ள 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார்.

பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதமற்ற அமைதியான பிராந்தியத்தை உருவாக்குவது மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகியவை இந்தியாவின் முதன்மை இலக்குகளாக இருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT