சர்வதேச நீதிமன்றத்தில் சிந்து நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுக்கான நீதிமன்ற செலவையும் கட்டும் பாகிஸ்தான்! முழு விபரம்
செய்தி முன்னோட்டம்
சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு நாட்டிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துவிட்டு, இறுதியாக அந்த நாட்டின் நீதிமன்ற செலவுகளையும் சேர்த்துக் கட்ட வேண்டிய ஒரு விசித்திரமான இக்கட்டான சூழலில் தற்பொழுது பாகிஸ்தான் சிக்கியுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் விசாரணை செலவுகளுக்காகப் பாகிஸ்தான் அரசு தனது சொந்த செலவை மட்டுமின்றி, இந்தியாவின் பங்கிற்கான பணத்தையும் சேர்த்து செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா இந்த சர்வதேச நீதிமன்ற விசாரணையைப் புறக்கணித்துள்ள நிலையிலும், ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள நிலையிலும், வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பும் பாகிஸ்தான் இதுவரை சுமார் 6 லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக செலவு செய்துள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் ஏன் இந்தியாவின் பங்கை செலுத்த வேண்டும்?
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள தர்க்கத் தீர்வு விதிகளின்படி, சர்வதேச நீதிமன்ற நடுவர் நடவடிக்கைகளின் போது வழக்கின் மொத்த செலவுகளை இந்தியாவும் பாகிஸ்தானும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், கடந்த 2025 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் உறுதியான மற்றும் மாற்றியமைக்க முடியாத நடவடிக்கைகளை எடுக்கும் வரை இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா அறிவித்தது.
அத்துடன் இந்த விவகாரம் தொடர்பான அனைத்து சர்வதேச நீதிமன்ற பங்குகளையும் இந்தியா முழுமையாக புறக்கணித்துள்ளது.
இந்தியா வராத நிலையிலும், இந்த வழக்கின் விசாரணைகள் முற்றிலும் முடங்கிவிடக் கூடாது என்பதற்காக பாகிஸ்தான் அரசாங்கமே இந்தியாவின் கட்டண பங்கையும் சேர்த்து செலுத்தி வருகிறது.
நீர்மின் திட்டப் பிரச்சினை
நீர்மின் திட்டப் பிரச்சனையும் இந்தியாவின் புறக்கணிப்பும்
இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு நதிகளில் கட்டப்பட்டு வரும் கிஷன்கங்கா மற்றும் ரத்லே ஆகிய இரண்டு முக்கிய நீர்மின் திட்டங்களின் வடிவமைப்பு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி, சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது.
ஆனால், இதை ஒரு நடுநிலை நிபுணரைக் கொண்டு மட்டுமே ஆராய வேண்டும் என்றும், ஒரே நேரத்தில் இரு வேறு தீர்வு வழிமுறைகளை செயல்படுத்துவது ஒப்பந்த விதிகளுக்கு எதிரானது என்றும் இந்தியா ஆரம்பம் முதலே கூறி வருகிறது.
மேலும், சட்டவிரோதமாக கட்டமைக்கப்பட்ட இந்த சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை ஏற்க மறுத்துள்ள இந்தியா, இதன் மூலம் வழங்கப்படும் எந்தவொரு தீர்ப்பும் செல்லுபடியாகாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வழக்கின் நிலை
இந்தியா இல்லாமல் வழக்குத் தொடருமா?
சர்வதேச நடுவர் நீதிமன்ற விதிகளின்படி, வழக்கில் தொடர்புடைய ஒரு தரப்பு பங்கேற்க மறுத்தாலும், அந்த விவகாரத்தை விசாரிப்பதற்கான முழு அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக நீதிமன்றம் கருதினால் விசாரணையைத் தொடர்ந்து நடத்த முடியும்.
அதன் அடிப்படையில், இந்தியாவின் ஆட்சேபனைகளையும் மீறி இந்த வழக்கை விசாரிக்கத் தங்களுக்கு அதிகாரம் உள்ளதாக சர்வதேச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
இதனால் இந்தியா தொடர்ந்து இந்த வழக்கை புறக்கணித்து வந்தாலும், பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டை போராடி நிரூபிக்க விரும்பும் வரை இந்த நீதிமன்ற செலவுகளை முழுமையாக தானே ஏற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
கூடுதல் சுமை
பலவீனமான பொருளாதாரத்தில் விழும் கூடுதல் சுமை
ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடி மற்றும் சர்வதேசக் கடன்களை நம்பித் தட்டுத்தடுமாறி மீண்டு வரும் பாகிஸ்தானுக்கு இந்த கூடுதல் நீதிமன்ற செலவு ஒரு பெரும் சுமையாக மாறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் 7 பில்லியன் டாலர் திட்டத்தின் கடுமையான நிபந்தனைகளின் கீழ் இயங்கி வரும் பாகிஸ்தான், வரிகளை உயர்த்துதல் மற்றும் மானியங்களைக் குறைத்தல் போன்ற கடுமையான பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.
நடப்பு 2026 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி 3.6 சதவீதமாகவும், பணவீக்கம் 7.2 சதவீதமாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேவையற்ற நீதிமன்றச் செலவுகள் அந்நாட்டின் நிதிச் சுமையை மேலும் அதிகரிக்கின்றன.