எரிபொருள் தட்டுப்பாட்டால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்! அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை சம்பளக் குறைப்பு; 4 நாள் வேலைத் திட்டம் அமல்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, பாகிஸ்தான் அரசு கடும் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன்படி, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களின் சம்பளத்தில் 5 முதல் 30 சதவீதம் வரை குறைப்பு செய்யப் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளார்.
திட்டங்கள்
சம்பளக் குறைப்பு மற்றும் சேமிப்புத் திட்டங்கள்
பிரதமர் அலுவலகம் சனிக்கிழமை (மார்ச் 14) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உயர் மட்டக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களைப் போலவே, பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் 30% வரை சம்பளம் குறைக்கப்படும். மேலும், அமைச்சரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்களின் அடுத்த இரண்டு மாத சம்பளம் பொது நலனுக்காக சேமிக்கப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் நிதி முழுவதும் மக்களின் நிவாரணப் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் கட்டுப்பாடு
வாகனப் பயன்பாடு மற்றும் எரிபொருள் கட்டுப்பாடு
எரிபொருள் நுகர்வைக் குறைக்கப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50% குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு 60% அரசு வாகனங்கள் சாலைக்கு வராது. புதிய வாகனங்கள் வாங்குவதற்கும், அரசு சார்ந்த இதர கொள்முதல்களுக்கும் முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வெளிநாடுகளுக்குச் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும்.
4 நாட்கள் வேலை
வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை
அமெரிக்கா - ஈரான் போர் மூன்றாவது வாரமாகத் தொடர்வதால், பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 55 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்தச் சூழலைச் சமாளிக்க ஏற்கனவே அரசு வாரத்திற்கு 4 நாட்கள் வேலைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சம்பளக் குறைப்பு மட்டுமின்றி, பல்வேறு கார்ப்பரேஷன் வாரியங்களில் உள்ள அரசுப் பிரதிநிதிகளுக்கான பங்கேற்பு கட்டணங்களும் இனி வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.