வாஷிங்டன் ராணுவ தளத்திற்கு மேல் பறந்த மர்ம ட்ரோன்கள்; ஈரான் போரின் எதிரொலியா?
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்காவின் மிக முக்கியமான அமைச்சர்கள் தங்கியுள்ள வாஷிங்டன் ராணுவ தளத்திற்கு மேல் மர்ம ட்ரோன்கள் பறந்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோர் வசிக்கும் ஃபோர்ட் மெக்நாயர் தளத்தில் கடந்த 10 நாட்களில் ஒரே இரவில் பல ட்ரோன்கள் பறந்துள்ளன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற அவசரக் கூட்டம் நடைபெற்றது. செயலாளர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டாலும், தற்போது வரை அவர்கள் அதே இடத்தில்தான் உள்ளனர். பாதுகாப்பு கருதி அவர்களின் இருப்பிடம் மற்றும் நகர்வுகள் குறித்து எவ்வித தகவலையும் வெளியிட முடியாது என பென்டகன் தெரிவித்துள்ளது.
அச்சுறுத்தல்
ஈரானின் அச்சுறுத்தலா?
அண்மையில் ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் ஆகியோர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க ஈரான் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என அமெரிக்கா அஞ்சுகிறது. இதன் விளைவாக, பல அமெரிக்க ராணுவ தளங்களின் பாதுகாப்பு நிலை 'FPCON Charlie' (பயங்கரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கான இரண்டாம் நிலை பாதுகாப்பு) அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் ராணுவ நிலைகளுக்கும் உலகளாவிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மர்மம்
மர்மம் தொடருகிறது
இந்த ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன அல்லது யாரால் இயக்கப்படுகின்றன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எஃப்பிஐ மற்றும் ராணுவப் புலனாய்வுத் துறையினர் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற மர்ம ட்ரோன்கள் அவ்வப்போது தென்படுவது அதிகாரிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.