LOADING...
ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு: பாதுகாப்பு அச்சுறுத்தலால் மகன் முஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார் எனத் தகவல்
முஜ்தபா கமேனி பாதுகாப்பு காரணங்களால் இதில் பொதுவெளியில் தோன்ற வாய்ப்பில்லை என தகவல்

ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு: பாதுகாப்பு அச்சுறுத்தலால் மகன் முஜ்தபா கமேனி பங்கேற்க மாட்டார் எனத் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 03, 2026
08:10 am

செய்தி முன்னோட்டம்

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் வரலாற்று சிறப்புமிக்க இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஈரானில் உள்ள பல்வேறு நகரங்களில் தொடங்கவுள்ள நிலையில், அவரது மகனும் அரசியல் வாரிசுமாக கருதப்படும் முஜ்தபா கமேனி பாதுகாப்பு காரணங்களால் இதில் பொதுவெளியில் தோன்ற வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிற்கான ஈரானின் உச்ச தலைவரின் அதிகாரப்பூர்வப் பிரதிநிதியான அயதுல்லா ஹக்கீம் எலாஹி, ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான தற்போதைய பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில், முஜ்தபா கமேனியின் உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதால், ஈரான் பாதுகாப்புப் படையினரால் அவருக்கு போதுமான பாதுகாப்பை வழங்க முடியாது என்றும், இதனால் அவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் எலாஹி தெரிவித்துள்ளார்.

அஞ்சலி

124 நாட்களுக்கு பிறகு நடைபெறும் இறுதி அஞ்சலி

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட கமேனியின் உடல், சுமார் 124 நாட்களாகக் குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. தற்போது தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி உசைய்னியாவிற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட கமேனியின் மகள், மருமகன் மற்றும் முஜ்தபா கமேனியின் மனைவி ஆகியோரின் உடல்களும் இந்த இறுதி ஊர்வலத்தில் ஒன்றாக எடுத்துச் செல்லப்பட உள்ளன.

இந்திய தூதர்கள்

காங்கிரஸ் தூதுவராக சல்மான் குர்ஷித் பயணம்

மறுபுறம், இந்தியா மற்றும் ஈரான் இடையேயான நீண்டகால நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்கிறார். கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேயின் இரங்கல் கடிதத்தை அவர் ஈரான் அரசிடம் சமர்ப்பிக்க உள்ளார். காஷ்மீர் விவகாரங்களின் போது ஈரான் எப்போதும் இந்தியாவிற்கு ஆதரவாக இருந்ததை சுட்டிக்காட்டிய குர்ஷித், கஷ்ட காலத்தில் நண்பனுக்கு ஆதரவாக நிற்பது இந்தியாவின் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement