ஜப்பானை நள்ளிரவு தாக்கிய 7.6 ரிக்டர் நிலநடுக்கம்; 'மெகா நிலநடுக்கம்' எச்சரிக்கை!
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் வடகிழக்கு கடலோரப் பகுதியில், நேற்று இரவு 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ஜப்பானின் முக்கியத் தீவான ஹொன்ஷூவில் உள்ள ஆமோரி மாகாணத்தின் கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர பகுதிகளில் 40 செ.மீ. முதல் 50 செ.மீ. உயரம் வரை சுனாமி அலைகள் பதிவாகின. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை 13 பேர் காயமடைந்துள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. சுமார் 90,000 குடியிருப்பாளர்களுக்கு வெளியேற்ற எச்சரிக்கைகள் விடப்பட்டன. முதல் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.5, 5.0, 4.8 மற்றும் அதிகாலை 5.1 ரிக்டர் அளவில் மேலும் பல நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அடுத்த சில நாட்களுக்கும் நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மெகா நிலநடுக்கம்
'மெகா நிலநடுக்கம்' எச்சரிக்கை
ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA), ஹொக்கைடோ-சான்ரிகு பகுதிகளில் ஒரு மாபெரும் "மெகா நிலநடுக்கம்" ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போது இயல்பு நிலையை விட அதிகமாக உள்ளது என்று ஒரு புதிய ஆலோசனையை விடுத்துள்ளது. இது ஒட்டுமொத்த வாய்ப்பு குறைவாக இருந்தாலும், மக்கள் அடுத்த ஒரு வாரத்திற்குத் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு பேரழிவை சந்தித்த ஃபுகுஷிமா (Fukushima) முன்னாள் அணுசக்தி நிலையத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் வெளியேற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற அணுசக்தி நிலையங்களிலும் எந்தக் கோளாறும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.