டாடா கெமிக்கல்ஸ் ஆலையை மூட கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவு; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
கென்யாவின் காஜியாடோ பகுதியில் உள்ள மகடி ஏரியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்திய நிறுவனமான டாடா கெமிக்கல்ஸ் தனது ஆலை செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அதிரடி உத்தரவிட்டுள்ளார். ஒரு நூற்றாண்டு காலமாக இயங்கி வரும் போதிலும், உள்ளூர் மக்களுக்கு போதிய வேலைவாய்ப்புகளையோ அல்லது தொழில்துறை வளர்ச்சியையோ இந்நிறுவனம் வழங்கத் தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
தொழில்துறை வளர்ச்சி
உள்ளூர் வளர்ச்சி மற்றும் தொழில்துறை விரிவாக்கம்
வியாழக்கிழமை நடைபெற்ற வளர்ச்சித் திட்ட விழாவில் பேசிய அதிபர் வில்லியம் ரூட்டோ, "நாம் மற்றவர்களுக்கு அடிமைகளா?" எனக் கேள்வி எழுப்பினார்.
நாட்டின் இயற்கை வளங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல், உள்ளூர் மக்களுக்கே பயன்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
டாடா நிறுவனத்திற்குப் பதிலாக புதிய முதலீட்டாளர்களைக் கொண்டு வந்து, காஜியாடோ பகுதியில் பெரிய அளவிலான கண்ணாடி தொழிற்சாலைகள் மற்றும் ரசாயன உற்பத்தி ஆலைகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளும் லித்தியம் வளமும்
அரரசின் இந்த முடிவிற்கு கென்யாவின் டிசிபி எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மகடி ஏரிப் பகுதியில் டிரில்லியன் கணக்கிலான மதிப்புடைய லித்தியம் தாதுக்கள் மற்றும் கச்சா எண்ணெய் வளங்கள் உள்ளதால், தனது சொந்த வியாபார லாபத்திற்காகவே அதிபர் ரூட்டோ டாடா நிறுவனத்தை வெளியேற்றப் பார்க்கிறார் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால் 1,00,000க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் நேரடியாகப் பாதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
தடை
ஜூலை மாதம் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை
முன்னதாகக் கடந்த ஜூலை மாத இறுதியில், மகடி சோடா தொழிற்சாலை தனது செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்யவும், சோடா ஆஷ் ஏற்றுமதியை நிறுத்தவும் கென்ய அரசு உத்தரவிட்டிருந்தது.
1911 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலை, 2005 ஆம் ஆண்டு டாடா நிறுவனத்தின் வசமானது.
ஆண்டுக்கு 3,50,000 டன்களுக்கும் அதிகமான சோடா ஆஷ் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.