LOADING...
அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் டிரோன் தாக்குதல்: கப்பல் சிறைபிடிப்புக்கு அதிரடி பதிலடி
அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் டிரோன் தாக்குதல்

அமெரிக்கக் கப்பல்கள் மீது ஈரான் டிரோன் தாக்குதல்: கப்பல் சிறைபிடிப்புக்கு அதிரடி பதிலடி

எழுதியவர் Venkatalakshmi V
Apr 20, 2026
07:58 am

செய்தி முன்னோட்டம்

ஓமன் கடலில் அமெரிக்க கடற்படையினரால் ஈரானிய வணிகக் கப்பலான 'டூஸ்கா' சிறைபிடிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அதற்குப் பதிலடியாக அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் பயங்கரமான டிரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் மத்திய கிழக்கில் நிலவி வரும் தற்காலிக போர்நிறுத்தத்தை முறித்து, மீண்டும் ஒரு முழு அளவிலான போருக்கான சூழலை உருவாக்கியுள்ளது. ஈரானின் அதிகாரப்பூர்வமற்ற 'தஸ்நிம்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி அமெரிக்கா தனது வணிகக் கப்பலை சட்டவிரோதமாகச் சிறைபிடித்ததற்கு நேரடிப் பதிலடியாக இந்த டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஓமன் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவக் கப்பல்களை இலக்கு வைத்து இந்த டிரோன்கள் ஏவப்பட்டன. எவ்வளவு டிரோன்கள் ஏவப்பட்டன, சேதம் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கப்பல் சிறைபிடிப்பு

கப்பல் சிறைபிடிப்பு தான் மோதலின் தொடக்கம்

முன்னதாக, அமெரிக்கா விதித்திருந்த கடல்சார் முற்றுகையை மீறிச் சென்ற 'டூஸ்கா' என்ற ஈரானியக் கப்பலை அமெரிக்கக் கடற்படை அதிரடியாகச் சிறைபிடித்தது. "அமெரிக்க மாலுமிகளின் எச்சரிக்கையை மீறிச் சென்றதால், அந்தக் கப்பலின் இன்ஜின் அறையில் துளையிட்டு அதை முடக்கினோம். தற்போது அந்தக் கப்பல் அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது," என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். கப்பல் பிடிபட்ட வீடியோ காட்சிகளை அமெரிக்க மத்திய கட்டளை மையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் செயலை "ஆயுதமேந்திய கடல் கொள்ளை" என ஈரான் சாடியுள்ளது. சீனாவிலிருந்து ஈரான் நோக்கி வந்துகொண்டிருந்த கப்பலை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் கூறியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

Advertisement