இந்தோனேசியா படகு விபத்து: ஜாவா கடலில் படகு கவிழ்ந்து 129 பேரைக் காணவில்லை; 6 உடல்கள் மீட்பு
செய்தி முன்னோட்டம்
இந்தோனேசியாவின் ஜாவா கடலில் 240-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற Virgo Transport 8 என்ற பயணியர் படகு சீற்றமிகு கடல் அலைகளால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் குறைந்தது 129 பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஜாவாவில் உள்ள சுராபயாவிலிருந்து போர்னியோ தீவில் உள்ள பஞ்சர்மசின் பகுதிக்கு சென்றபோதே இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. இதுவரை நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையில் 108 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய 129 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பின்னணி
விபத்தின் பின்னணி மற்றும் மீட்புப் பணிகள்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் படகின் கேப்டன் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்பு கொண்டு, கடலில் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழும்புவதாகவும், படகு ஒரு பக்கமாகச் சாய்கிறது என்றும் அவசர உதவி கோரியுள்ளார்.
அதன்பின் சில நிமிடங்களிலேயே இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பஞ்சர்மசின் தேடுதல் மற்றும் மீட்பு அலுவலகத் தலைவர் ஐ புட்டு சுதயானா தலைமையில், 4 கடற்படைக் கப்பல்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் உட்பட சுமார் 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ள போதிலும், காணாமல் போனவர்களைக் கண்டறிய வான்வழியிலும் கடல்வழியிலும் தேடுதல் எல்லை விரிவாக்கப்பட்டு வருகிறது.