
வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் அங்கமாக தவறாக சித்தரித்த இஸ்ரேல்; இந்தியர்களின் எதிர்ப்பை அடுத்து மன்னிப்பு கோரியது
செய்தி முன்னோட்டம்
எக்ஸ் சமூக ஊடக தளத்தில் ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக தவறாகக் காட்டிய வரைபடத்தைப் பகிர்ந்த பின்னர் இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) மன்னிப்பு கோரியது.
ஈரானை உலகளாவிய அச்சுறுத்தலாக எடுத்துக்காட்டும் வகையில் வெளியிட்ட ஒரு பதிவில், ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தானில் இருப்பதுபோல் காட்டியிருந்தது.
இந்தியர்கள் உடனடியாக அந்த பதிவில் கண்டனம் தெரிவித்த நிலையில், விமர்சங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மன்னிப்புக் கோரியுள்ளது.
வரைபடம் பிராந்திய அச்சுறுத்தல்களை விளக்குவதற்காகவே தவிர அதிகாரப்பூர்வ புவிசார் அரசியல் எல்லைகளை அல்ல என்று தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை, இந்தப் படத்தால் ஏற்பட்ட எந்தவொரு தவறுக்கும் தாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.
இந்திய அரசு
இந்திய அரசின் பதில்
பாகிஸ்தான் மற்றும் சீனாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் உட்பட ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை நாட்டின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்ற தனது நிலைப்பாட்டை இந்தியா தொடர்ந்து மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், அரசாங்கம் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ பதிலை வெளியிடவில்லை.
எனினும், இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளிப்படையாக மன்னிப்பு கோரியுள்ளதால், இந்திய அரசு இதை தீவிர பிரச்சினையாக மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா-இஸ்ரேல் உறவுகள் வலுவாக இருக்கும் நேரத்தில் இந்த ராஜதந்திர தவறு நிகழ்ந்துள்ளது.
முன்னதாக, 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க இஸ்ரேல் பயணம் இருதரப்பு உறவில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறித்தது.
மேலும் இந்தியா இஸ்ரேல் இடையே மிகப்பெரிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப கூட்டணி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் மன்னிப்புப் பதிவு
This post is an illustration of the region. This map fails to precisely depict borders. We apologize for any offense caused by this image.
— Israel Defense Forces (@IDF) June 13, 2025