மர்மமான மான்ஸ்டர் வேட்டை: லோச் நெஸ் மான்ஸ்டரை பிடிக்க ஸ்காட்லாந்தில் ஒன்று கூடிய மக்கள்
நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களின் பங்கேற்புடன், பழம்பெரும் லோச் நெஸ் அரக்கனை கண்டறியும் முயற்சியில் நூற்றுக்கணக்கானோர் வடக்கு ஸ்காட்லாந்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) ஒன்று கூடியுள்ளனர். நீண்ட காலமாக நீடிக்கும் லோச் நெஸ் அரக்கன் குறித்த மர்மத்திற்கு விடை தேடி இந்த தேடல் நடக்க உள்ளது. வடக்கு ஸ்காட்லாந்தின் டிரம்னாட்ரோசிட் பகுதியில் உள்ள லோச் நெஸ் மையம் மற்றும் லோச் நெஸ் ஆராய்ச்சிக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முயற்சியானது, லோச் நெஸ்ஸில் இயற்கையான மற்றும் அசாதாரணமான காட்சிகளை நிலத்தில் உள்ள இடங்களிலிருந்து ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திட்டமிடப்பட்ட இந்த தேடலில் உதவி செய்வதற்காக 300 பேர் அங்கு குவிந்துள்ளனர்.
லோச் நெஸ் அரக்கன் மர்மத்தின் பின்னணி
ஆறாம் நூற்றாண்டில் அயர்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் செயின்ட் கொலம்பா என்பவர் தனது பயண புத்தகத்தில் முதன்முறையாக இந்த லோச் நெஸ் அரக்கன் குறித்து பதிவிட்டுள்ளார். அதன் பிறகு, 12 ஆம் நாற்றாண்டில் இது குறித்த பதிவு ஒன்று இருந்தாலும், ஏறக்குறைய 90 ஆண்டுகளுக்கு முன்பு லோச் நெஸ் பகுதியில் அமைந்துள்ள நெஸ் நதியில் ஹோட்டல் மேலாளர் ஆல்டி மேக்கே என்பவர், திமிங்கலத்தைப் போன்ற ஒரு உயிரினத்தை கண்டதாகக் கூறியதில் இருந்து, இந்த மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை எந்த விடையும் கிடைக்காத நிலையில், இந்த முறை எப்படியும் மர்மத்தை உடைத்துவிட்டு வேண்டும் என பல ஆய்வாளர்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.