இந்திய மாணவர்களின் 74 சதவீத விண்ணப்பங்கள் கனடாவால் நிராகரிப்பு; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
சர்வதேச மாணவர்கள் அனுமதிக்கு கனடா விதித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள், இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் மாணவர்களைப் பெரிதும் பாதித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் இந்திய மாணவர்களின் மிகவும் விருப்பமான நாடாக இருந்த கனடாவின் கவர்ச்சி குறையத் தொடங்கியுள்ளது. நிரந்தரமற்ற குடியேற்றவாசிகள் எண்ணிக்கையைக் குறைக்கும் மற்றும் மாணவர் விசா தொடர்பான மோசடிகளைத் தடுக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, கனடா 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச மாணவர் அனுமதிகளைக் குறைத்தது. இதன் விளைவாக, சமீபத்திய தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய மாணவர்களின் கல்வி அனுமதி விண்ணப்பங்களில் சுமார் 74 சதவீதம் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது 2023 ஆகஸ்டில் இருந்த 32 சதவீத நிராகரிப்பு விகிதத்தை ஒப்பிடும்போது மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
நிராகரிப்பு
40 சதவீதம் நிராகரிப்பு
அதேசமயம், ஒட்டுமொத்தமாகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் நிராகரிப்பு விகிதம் 40 சதவீதமாகவே உள்ளது. விசா நிராகரிப்பு விகிதம் அதிகரித்ததோடு, இந்திய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2023 ஆகஸ்டில் 20,900 ஆக இருந்த இந்திய விண்ணப்பங்கள், 2025 ஆகஸ்டில் 4,515 ஆகக் குறைந்துள்ளது. இருப்பினும், 1,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில், இந்தியாவே மிக அதிக நிராகரிப்பு விகிதத்தைப் பெற்றுள்ளது. இந்த திடீர் அதிகரிப்புக்கு முக்கியக் காரணம், விசா மோசடிகளை ஒடுக்குவது தான் என்று கனடாவின் குடிவரவுத் துறை தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில், மோசடியான அனுமதிச் சான்றிதழ்களுடன் கூடிய சுமார் 1,550 விண்ணப்பங்களை அதிகாரிகள் கண்டறிந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவில் இருந்து வந்தவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.