வரலாற்று வெற்றி! நியூயார்க் மேயரானார் இந்திய வம்சாவளி ஜோஹ்ரான் மாம்டானி
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் நிதி மற்றும் கலாச்சார தலைநகரமான நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மாம்டானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 34 என்பது கூடுதல் தகவல். இந்த வெற்றியின் மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை மாம்டானி படைத்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய அரசியல் பதவிகளில் இளம் வயதிலேயே (34) இவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
போட்டி
மேயர் தேர்தலில் போட்டியிட்டவர்கள்
ஜோஹ்ரான் மாம்டானி, இந்தப் பரபரப்பான மேயர் தேர்தலில், நியூயார்க்கின் முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மற்றும் குடியரசுக் கட்சியின் முக்கிய வேட்பாளரான கர்டிஸ் ஸ்லிவா போன்ற மூத்த மற்றும் சக்தி வாய்ந்த தலைவர்களை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்கடித்தார். அமெரிக்க ஊடக நிறுவனமான NBC, மாம்டானியின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது.
முக்கியத்துவம்
அரசியல் முக்கியத்துவம்
சட்டமன்ற உறுப்பினராக (Assemblyman) செயல்பட்டு வந்த ஜோஹ்ரான் மாம்டானி, ஜனநாயகக் கட்சியின் முற்போக்குக் கொள்கைகளைக் கொண்ட இளைஞர் அணியை சேர்ந்தவர். மலிவான வீட்டு வசதி, பொதுப் போக்குவரத்து மற்றும் காலநிலை மாற்றம் போன்ற முக்கியப் பிரச்சனைகளை மையப்படுத்தி இவர் நடத்திய தீவிர தேர்தல் பிரச்சாரம் இவருக்கு இந்த மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. இவரது வெற்றி, நியூயார்க் நகர அரசியலில் முற்போக்கு சிந்தனைகளுக்குக் கிடைத்துள்ள முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.