Loading...
"8 முதல் 10 மணி நேர மின்வெட்டு! முடங்கிய தொழில்கள்; அண்டை நாடான இந்தியாவிடம் உதவி கோரிய வங்காளதேசம்
வங்காளதேசத்தில் கடும் மின்சார தட்டுப்பாடு

"8 முதல் 10 மணி நேர மின்வெட்டு! முடங்கிய தொழில்கள்; அண்டை நாடான இந்தியாவிடம் உதவி கோரிய வங்காளதேசம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 13, 2026
04:42 pm

செய்தி முன்னோட்டம்

வங்காளதேச நாடு இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான எரிசக்தி மற்றும் மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டு வருகிறது. தலைநகர் டாக்காவிற்கு வெளியே உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நாளுக்கு 8 முதல் 10 மணி நேரம் வரை தொடர் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் மின்சாரத்திற்கான தேவை 18,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ள நிலையில், மின் உற்பத்தி வெறும் 13,000 மெகாவாட்டாகக் குறைந்துள்ளதே இத்தகைய கடுமையான மின்தடைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

கட்டுப்பாடுகள்

மின்நிலையங்கள் மீது தாக்குதல் மற்றும் அரசின் கட்டுப்பாடுகள்

தொடர் மின்வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சில இடங்களில் மின்சார நிலையங்கள் மற்றும் அலுவலகங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் மின் கட்டமைப்பு மையங்களுக்குப் பாதுகாப்பு வழங்கிடக் கோரி காவல்துறைக்குக் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

நிலைமையைக் கட்டுப்படுத்த தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு, வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளை இரவு 8 மணிக்குள் கட்டாயமாக மூட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் அலங்கார விளக்குகள் மற்றும் விளம்பரப் பலகைகளுக்கான மின்சாரமும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

தொழில்கள் முடக்கம்

இயற்கை எரிவாயு பற்றாக்குறையும் முடங்கிய தொழில்களும்

வங்காளதேசத்தில் நிலவும் இந்தக் மின்சார நெருக்கடிக்கு இயற்கை எரிவாயுவின் கடுமையான தட்டுப்பாடே முதன்மைக் காரணமாகும்.

எரிவாயு முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கடல் சீற்றம் காரணமாக திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வரத்து பாதியாகக் குறைந்துள்ளது.

இதனால் நாட்டின் ஆடை உற்பத்தித் துறை, விவசாயம் மற்றும் இறால் பண்ணை தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆக்ஸிஜன் உந்தி இயங்காததால் இறால் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் அபாயம் உருவெடுத்துள்ளது.

ADVERTISEMENT

உதவி கோரிக்கை

அவசர உதவிக்கு இந்தியாவை நாடிய வங்காளதேசம்

இந்த நெருக்கடியை சமாளிக்க, இந்தியாவிலிருந்து எல்லைக் குழாய் மூலம் கூடுதல் டீசல் வழங்கிட வேண்டும் என வங்காளதேச அரசு இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய-வங்காளதேச நட்புறவு டீசல் குழாய் வழித்தடத்தின் மூலம் கூடுதல் டீசல் விநியோகிக்க வங்காளதேச மின்சாரத் துறை அமைச்சர் கோரியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் ரீதியான தூதரகப் பதற்றங்கள் நிலவி வரும் போதிலும், தனது அண்டை நாட்டின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்ய இந்தியா உதவிக்கரம் நீட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT