
பிப்ரவரி 2026 இல் பங்களாதேஷில் தேர்தல்; தலைமை ஆலோசகர் முகமது யூனூஸ் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பங்களாதேஷ் அதன் அடுத்த பொதுத் தேர்தலை பிப்ரவரி 2026 இல் நடத்தும் என்று அந்நாட்டு அரசின் இடைக்காலத் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் அறிவித்தார். முன்னதாக, ஆகஸ்ட் 5, 2024 அன்று மாணவர் தலைமையிலான போராட்டங்கள் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார். இது நாட்டில் 15 ஆண்டுகள் நீடித்த ஷேக் ஹசீனாவின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டின் அரசியலை மாற்றியது. ஷேக் ஹசீனா வெளியேற்றத்தைத் தொடர்ந்து, புதிய அரசு பொறுப்பேற்கும் வரை பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவரான முகமது யூனுஸ், அரசின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தற்போதைய முகமது யூனுஸின் அறிவிப்பு பங்களாதேஷ் அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
எதிர்க்கட்சிகள்
எதிர்க்கட்சிகள் வற்புறுத்தலால் முன்கூட்டியே தேர்தல்
ஆரம்பத்தில் ஜூன் 2026 என்று பரிந்துரைக்கப்பட்ட தேர்தல் தேதி, பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP), ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் தேசிய குடிமக்கள் கட்சி (NCP) உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி குழுக்களிடமிருந்து முகமது யூனுஸ் ஒருமித்த கருத்தைப் பெற்ற பிறகு திருத்தப்பட்டது. டாக்காவில் இருந்து பேசிய முகமது யூனுஸ், பிப்ரவரியில் ரமலானுக்கு முன் தேர்தலை திட்டமிட தேர்தல் ஆணையத்திடம் முறையாகக் கோருவதாகக் கூறினார். "இந்த முறை, நாம் அனைவரும் வாக்களிப்போம். யாரும் விடுபட மாட்டார்கள்." என்று முகமது யூனுஸ் தொலைக்காட்சி உரையில் கூறி, புதிய ஜனநாயக சகாப்தத்தை தொடங்குவதாக உறுதியளித்தார்.