உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: புதிய கட்டுப்பாடுகளை விதித்த ஆஸ்திரேலியா
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்க, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நாடு தழுவிய புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகளை புதன்கிழமை அன்று அறிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய குடிமக்களைப் பாதுகாக்க 'தேசிய எரிபொருள் பாதுகாப்புத் திட்டம்' (National Fuel Security Plan) அமல்படுத்தப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
My Address to the Nation. pic.twitter.com/Iaqts9Rd4X
— Anthony Albanese (@AlboMP) April 1, 2026
பெட்ரோல்
பெட்ரோல் மீதான வரி பாதியாக குறைப்பு
மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில், பெட்ரோல் மீதான கலால் வரியை (Fuel Excise) அடுத்த மூன்று மாதங்களுக்குப் பாதியாகக் குறைப்பதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 26 சென்ட் வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு ஏற்கனவே பெட்ரோல் நிலையங்களில் நடைமுறைக்கு வரத் தொடங்கியுள்ளது. மேலும், கனரக வாகனங்களுக்கான சாலைப் பயன்பாட்டுக் கட்டணமும் தற்காலிகமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
"வரும் மாதங்கள் சவாலானவை": பிரதமர் எச்சரிக்கை
தற்போது நிலவும் சூழல் குறித்து எக்ஸ் (X) தளத்தில் வீடியோ மூலம் உரையாற்றிய அல்பானீஸ், "அடுத்த சில மாதங்கள் நமக்கு எளிதாக இருக்கப்போவதில்லை என்பதை நான் வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போரினால் ஏற்படும் அழுத்தங்களை எந்த அரசாங்கத்தாலும் முழுமையாக நீக்க முடியாது, ஆனால் அதன் பாதிப்பிலிருந்து ஆஸ்திரேலியாவைப் பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்" என்று உருக்கமாகப் பேசியுள்ளார்.
வேண்டுகோள்
மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
எரிபொருள் இருப்பைத் தக்கவைக்கப் பிரதமர் அல்பானீஸ் நாட்டு மக்களுக்குச் சில முக்கியக் கோரிக்கைகளை விடுத்துள்ளார்: பொதுப் போக்குவரத்து: மக்கள் வேலைக்குச் செல்லும்போது தங்களது சொந்த வாகனங்களைத் தவிர்த்துவிட்டு, ரயில், பேருந்து அல்லது டிராம் போன்ற பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். தேவைக்கு மட்டும்: "உங்களுக்குத் தேவையான அளவு மட்டும் எரிபொருளைப் பயன்படுத்துங்கள், அளவுக்கு அதிகமாகச் சேமிக்க வேண்டாம்" என அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னுரிமை: விவசாயிகள், சுரங்கத் தொழிலாளர்கள், செவிலியர்கள் மற்றும் ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களுக்கு எரிபொருள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய, மற்றவர்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.