எகிப்து பிரமிடு அருகே 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள்; தமிழனின் கடல் வணிகத்திற்கு புதிய சான்று
செய்தி முன்னோட்டம்
சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திற்கு பயணம் மேற்கொண்ட ஒரு தமிழ் வணிகர், அங்குள்ள புகழ்பெற்ற 'ராஜாக்களின் பள்ளத்தாக்கில்' தனது அடையாளத்தை பதித்து சென்றுள்ளார். பல நூற்றாண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்த இந்த கல்வெட்டுகளை சுவிட்சர்லாந்து நாட்டின் லோசேன் பல்கலைக்கழகப் பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் தற்போது கண்டறிந்து விளக்கியுள்ளார். எகிப்திய அரசர்களான பார்வோன்களின் கல்லறைகள் உள்ள இந்தப் பள்ளத்தாக்கின் சுவர்களில், தமிழ்-பிராமி எழுத்துக்களால் ஆன சில வாசகங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வரலாறு
கல்வெட்டில் இருப்பது என்ன?
எகிப்திய அரசர்களான பார்வோன்களின் கல்லறைகள் உள்ள இந்தப் பள்ளத்தாக்கின் சுவர்களில், தமிழ்-பிராமி எழுத்துக்களால் ஆன சில வாசகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு கல்வெட்டில் "சிகை கொற்றன் - வர கண்ட" என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கு "சிகை கொற்றன் இங்கு வந்து பார்த்தான்" என்று பொருள். 'சிகை' என்பது முடியை குறிக்கும் சொல்லாகவும், 'கொற்றன்' என்பது தலைவன் அல்லது அரசனை குறிக்கும் சொல்லாகவும் கருதப்படுகிறது. மற்றொன்றில் "கோபன் வரத கண்டன்" (கோபன் வந்து பார்த்தான்) என்றும், தென்னிந்திய கல்வெட்டுகளில் அடிக்கடி காணப்படும் "சாத்தன்" என்ற பெயரும் இடம்பெற்றுள்ளன.
முக்கியத்துவம்
கல்வெட்டுகள் கண்டறிந்ததன் முக்கியத்துவம் என்ன?
இதுவரை ரோமானியர்கள் மட்டுமே இந்தியாவுக்கு வணிகத்திற்காக வந்தனர் என்ற கருத்து இருந்தது. ஆனால், இந்த புதிய ஆதாரம் தமிழர்களும் எகிப்து மற்றும் ரோமானிய பகுதிகளுக்கு வணிகத்திற்காக சென்று வந்தனர் என்பதற்கான 'இருவழி வணிக' (Two-way trade) சான்றாக அமைந்துள்ளது. தமிழர்கள் துறைமுக நகரங்களோடு நின்றுவிடாமல், எகிப்தின் உட்பகுதிகளுக்கு சென்று முக்கியமான இடங்களை பார்வையிட்டுள்ளனர். அங்குள்ள கிரேக்க கல்வெட்டுகளை பார்த்து ஈர்க்கப்பட்டு, அதே பாணியில் தமிழிலும் செதுக்கியுள்ளனர். அங்கு கண்டறியப்பட்ட 30 கல்வெட்டுகளில் 20 கல்வெட்டுகள் தமிழில் உள்ளன. மற்றவை சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதம் மொழிகளில் உள்ளன. இது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த வணிகர்களும் அங்கு சென்றதை காட்டுகிறது.
கருத்து
ஆய்வாளர்கள் கருத்து
மணி கன்ட்ரோல் செய்தியின்படி, சென்னையில் நடைபெற்ற கல்வெட்டியல் மாநாட்டில் இந்தப் புதிய கண்டுபிடிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டன. இது குறித்து பேசிய தொல்லியல் துறை ஆலோசகர் பேராசிரியர் கா. ராஜன், "தமிழ் வணிகர்கள் ரோமானியக் காலத்தில் எகிப்தின் உட்பகுதிகள் வரை சென்றதற்கான மிக முக்கியமான ஆதாரம் இது" என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். கடல் கடந்து வாணிபம் செய்த தமிழர்களின் வீரத்திற்கும், அறிவுக்கும் இந்த 2,000 ஆண்டுப் பழமையான 'கிராஃபிட்டி' (Graffiti) எழுத்துக்கள் ஒரு அழியாத சாட்சியாக மாறியுள்ளன.