ஆட்டநாயகன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி! மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி!
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரின் 13-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்புத் தொடரில் தனது மூன்றாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் "நான் இன்னும் இங்கேயே தான் இருக்கிறேன்" என 24 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் உலகிற்கு நினைவூட்டியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் தற்போது சூர்யவன்ஷியெனப் பல புதிய நட்சத்திரங்கள் இந்திய டி20 அணியின் தொடக்க வீரர் இடத்திற்குப் போட்டி போட்டு வரும் வேளையில், ஜெய்ஸ்வால் நேற்று ஆடிய ஆட்டம் மிக முக்கியமானது.
சாதனை வேகம்
யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடி சாதனை
11 ஓவர்கள் மட்டுமே கொண்ட இந்தப் போட்டியில், ஜெய்ஸ்வால் தனது 2023-ஆம் ஆண்டு அதிவேக அரைசத சாதனையை (13 பந்துகள்) மீண்டும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் 9 பந்துகளில் 35 ரன்கள் விளாசி மிரட்டினார். இறுதியில் 240.62 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 77 ரன்கள் (32 பந்துகள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 25 பந்துகளுக்கு மேல் அவர் எதிர்கொண்ட டி20 இன்னிங்ஸ்களில் இதுவே அவரது அதிகபட்ச ஸ்டிரைக் ரேட் ஆகும்.
புதிய ஷாட்கள்
பந்துவீச்சைச் சிதறடித்த விதம்
தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரிலேயே 4, 6, 4, 0, 4, 4 என 22 ரன்களைக் குவித்து ராஜஸ்தானின் வேகத்தைத் தீர்மானித்தார் ஜெய்ஸ்வால். பும்ராவின் யார்க்கர் சற்றுத் தவறினாலும், அதைத் தலைக்கு மேல் தூக்கி அடித்து அசத்தினார். கசன்ஃபரின் மிஸ்டரி ஸ்பின்களையும் மைதானத்திற்கு வெளியே அனுப்பினார். வழக்கமாக மைதானத்தின் முன் பகுதியில் ஆடுவதில் வல்லவரான ஜெய்ஸ்வால், இந்த முறை மைதானத்தின் பின் பகுதியையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளார். இதுவரை ஆடிய 3 போட்டிகளிலேயே அதிகப்படியான ஸ்கூப் (3) மற்றும் ராம்ப் (4) ஷாட்களை ஆடித்தனது பேட்டிங் வீச்சை அதிகரித்துள்ளார். ஒவ்வொரு முறையும் புதிய ஷாட்களை எப்படிக் கற்றுக்கொள்வது, மைதானத்திற்கு ஏற்ப எப்படி ஆடுவது என்பதில் கவனம் செலுத்துகிறேன் என அவர் தெரிவித்தார்.
இந்திய அணியில் கடும் போட்டி
உலக கோப்பை கனவு
அபிஷேக் சர்மா (T20I No.1), சஞ்சு சாம்சன் (உலகக்கோப்பை நாயகன்), இஷான் கிஷன் மற்றும் இப்போது வைபவ் சூர்யவன்ஷி என இந்திய அணியின் தொடக்க இடத்திற்குப் பலத்த போட்டி நிலவுகிறது. இந்தச் சூழலில், ஜெய்ஸ்வாலின் இந்த அதிரடி ஆட்டம் தேர்வுக் குழுவினருக்கு ஒரு வலுவான நினைவூட்டலாக அமைந்துள்ளது.