LOADING...
ஆடவர் உலகக்கோப்பையில் 3 பெண்கள் செய்த மெகா சாதனை! ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்றுத் தருணம்
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் புதிய சாதனை படைத்த 3 பெண் நடுவர்கள்

ஆடவர் உலகக்கோப்பையில் 3 பெண்கள் செய்த மெகா சாதனை! ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் திரும்பிப் பார்க்க வைத்த வரலாற்றுத் தருணம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 21, 2026
10:11 am

செய்தி முன்னோட்டம்

தற்போது நடந்து வரும் ஃபிஃபா உலகக்கோப்பை 2026 தொடரில், முன்னணி நட்சத்திர வீரர்களின் கோல்களையும் ஆட்டங்களையும் தாண்டி ஒரு புதிய வரலாற்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. செக்கியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில், கால்பந்து உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக ஒட்டுமொத்த கள நடுவர்களும் பெண்களாக மட்டுமே கொண்ட ஒரு குழு ஆட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளது. தலைமை நடுவர் டோரி பென்சோ, உதவி நடுவர்கள் புரூக் மாயோ மற்றும் கேத்ரின் நெஸ்பிட் ஆகிய மூவர் அடங்கிய இந்த பெண் நடுவர்கள் குழு இச்சாதனையைப் படைத்துள்ளது.

புரூக் மாயோ

டெக்சாஸ் மைதானம் முதல் உலகக்கோப்பை வரை புரூக் மாயோவின் பயணம்

இந்த வரலாற்று சாதனைக்கு பின்னால் பல வருட கால கடின உழைப்பும், தியாகங்களும் நிறைந்துள்ளன. இக்குழுவின் உதவி நடுவரான புரூக் மாயோ, தனது பதின்ம வயதில் டெக்சாஸ் மாகாணத்தின் கார்லேண்ட் பகுதியில் உள்ள உள்ளூர் இளையோர் போட்டிகளில் நடுவராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். கடந்த 2023 ஆம் ஆண்டில், ஆண்களுக்கான உலகக்கோப்பைத் தொடரில் நடுவராகும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்கும் என்பதை உணர்ந்த கணமே, தனது ஒட்டுமொத்த கவனத்தையும் உழைப்பையும் இந்த ஒற்றை இலக்கை நோக்கியே திருப்பியதாக மாயோ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

பயிற்சி மற்றும் சவால்கள்

உலகக்கோப்பை நடுவர்களுக்கான கடுமையான பயிற்சி மற்றும் சவால்கள்

உலகக்கோப்பை போன்ற ஒரு மிகப்பெரிய சர்வதேச மேடையில் நடுவராகப் பணியாற்றுவது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதற்காக புரூக் மாயோ, மேஜர் லீக் சாக்கர் மற்றும் பல சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பணியாற்றித் தனது திறமையை மெருகேற்றிக் கொண்டார். மேலும், சிறப்பு உடற்தகுதி பயிற்சியாளர்களின் உதவியுடன் தனது உடல் வலிமையையும் சர்வதேச தரத்திற்கு உயர்த்தினார். போட்டிக்கு முந்தைய 48 மணி நேரங்கள் என்பது வியூகக் கூட்டங்கள், உடற்தகுதி தேர்வுகள் மற்றும் அணிகள் குறித்த விரிவான ஆய்வுகளுடன் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

லட்சியம்

லட்சியத்திற்காகத் தனது ஆசிரியர் பணியைத் துறந்த புரூக் மாயோ

இந்த அசாத்திய வெற்றியை அடைவதற்காக புரூக் மாயோ தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பெரிய தியாகங்களைச் செய்துள்ளார். ஆரம்பக் கட்டங்களில் போட்டிகளில் பங்கேற்கத் தனது சொந்தப் பணத்தையே முதலீடு செய்தவர், சர்வதேச அளவில் நடுவர் பணியில் முழு கவனம் செலுத்துவதற்காகத் தான் பார்த்து வந்த மதிப்புமிக்க ஆசிரியர் மற்றும் பயிற்சியாளர் பணியை முழுமையாகத் துறந்தார். குடும்ப நிகழ்வுகள், பண்டிகைகள் எனப் பலவற்றைத் தவறவிட்ட போதிலும், கடந்த பத்து வருடங்களாகத் தனது பெற்றோர், மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் தனக்கு மிகப்பெரிய தூணாகப் பக்கபலமாய் நின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

புதிய உத்வேகம்

அடுத்த தலைமுறைப் பெண்களுக்குப் புதிய உத்வேகம்

மைதானத்தில் இவர்களது வருகை என்பது வெறும் ஒரு கால்பந்து விளையாட்டுப் போட்டியை வழிநடத்துவதுடன் முடிந்துவிடவில்லை. இது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான இளம் பெண் கால்பந்து ரசிகர்களுக்கும், நடுவராகத் துடிக்கும் பெண்களுக்கும் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. தங்களை ஒரு சாதாரண நடுவர் குழுவாகவே தாங்கள் கருதிய போதிலும், தங்களது இந்த தற்போதைய அடையாளம் உலகளவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது என்றும், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் எதையும் சாதிக்க முடியும் என்பதை இது நிரூபித்துள்ளதாகவும் மாயோ பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

சாதனையாளர்கள்

சாதிப்பதற்கு பாலினம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த சாதனையாளர்கள்

ஆண்களுக்கு நிகரான சம வாய்ப்புகளைப் பெறுவதற்குப் பெண் நடுவர்கள் இன்னும் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியுள்ளது என்பதே தற்போதைய யதார்த்த நிலமையாகும். இருப்பினும், தங்களைப் போன்ற பல பெண் நடுவர்களின் தொடர்ச்சியான உயர்தரப் செயல்பாடுகள், கால்பந்து உலகின் இத்தகைய கடினமான கதவுகளை நிரந்தரமாகத் திறந்து வைத்துள்ளதாக மாயோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஃபிஃபா உலகக் கோப்பை 2026 தொடரில் தங்களது முத்திரையைப் பதித்துள்ள இந்த மூன்று பெண்களின் கதை, சாதிப்பதற்குப் பாலினம் ஒரு தடையல்ல என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.

Advertisement