பிபா உலகக்கோப்பை இறுதிப்போட்டி சர்ச்சை குறித்து சால்ட் பே விளக்கம்
இணையத்தில் சால்ட் பே என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற சமையல்காரரான நஸ்ரெட் கோக்சே, கத்தாரில் நடந்த பிபா உலக கோப்பை 2022 இறுதிப் போட்டியின் போது, பிரான்ஸுக்கு எதிரான அர்ஜென்டினாவின் வெற்றியைத் தொடர்ந்து களத்தில் படம்பிடித்தபோது சர்ச்சையை ஏற்படுத்தினார். பல ரசிகர்கள் அவர் வரலாற்று நிகழ்வில் கவனத்தை திருட முயன்றதாக குற்றம் சாட்டினர். மேலும் அவர் களத்தில் உலகக் கோப்பை கோப்பையை வைத்திருப்பது போன்ற படங்கள் வெளிவந்தபோது நிலைமை மோசமடைந்தது. இந்நிலையில் சமீபத்திய உரையாடலில், சால்ட் பே இந்த சம்பவத்தைப் பற்றி தனது தரப்பு கருத்தை பகிர்ந்துள்ளார்.
சம்பவம் குறித்த சால்ட் பேவின் கருத்து
சால்ட் பே கால்பந்து மைதானத்தில் இருந்தது குறித்து கூறுகையில், "நான் விளம்பர நோக்கத்துடன் களத்தில் இறங்கவில்லை. அர்ஜென்டினா மீதான எனது காதல் மிக அதிகம். கோப்பையை வென்றபோது எல்லோரையும் போல் உணர்ச்சி மிகுதியில் உள்ளே சென்றுவிட்டேன். அதை நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக உள்ளது. அப்போது ஆடுகளத்தில் குறைந்தது 1,000 பேர் இருந்தனர், ஆனால் அவர்கள் வீடியோவைக் காட்டும்போது என்னை மட்டுமே குறிப்பிட்டு காட்டினார். நான் யாரையும் உதைக்கவில்லை, எதையும் திருடவில்லை." என்று கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு பிபா நிர்வாகம் தனிநபர்கள் மைதானத்தில் எப்படி நுழைந்தார்கள் என விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.