பிபா உலகக்கோப்பை வரலாற்றில் ஹிஜாப் அணிந்து பங்கேற்ற முதல் வீராங்கனை; வரலாறு படைத்த நௌஹைலா பென்சினா
நௌஹைலா பென்சினா 2023 பிபா மகளிர் உலகக்கோப்பையில், தென் கொரியாவுக்கு எதிரான மொராக்கோவின் ஆட்டத்தின் போது பிபா உலகக்கோப்பை வரலாற்றில் ஹிஜாப் அணிந்து விளையாடிய முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். கால்பந்து விளையாட்டில் டிஃபெண்டராக விளையாடும் மொராக்கோவைச் சேர்ந்த பென்சினா, அந்த நாட்டு யு20 மற்றும் சீனியர் அணிகளுக்காக விளையாடியுள்ளார். பிபா மகளிர் உலகக்கோப்பை வரலாற்றில், நௌஹைலா பென்சினா முதல்முறையாக இந்த தொடரில் பங்கேற்பதோடு, மொராக்கோ அணியும் முதல் முறையாக இந்த சீசனில் தான் பங்கேற்கிறது. மேலும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகளின் குழுவான MENA'வில் இருந்து பிபா மகளிர் உலகக்கோப்பையில் விளையாடும் முதல் அணியும் மொராக்கோதான்.
2014 வரை ஹிஜாபுக்கு தடை விதித்திருந்த பிபா
ஜெர்மனிக்கு எதிரான அணியின் முதல் ஆட்டத்தில் பென்சினா பங்கேற்காத நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) தென்கொரியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் மொராக்கோ அணிக்காக விளையாடினார். இதன் மூலம், அவர் பிபா வரலாற்றில் ஹிஜாப் அணிந்து பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்ததோடு, மொராக்கோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக, கடந்த காலங்களில், உடல்நலம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக கால்பந்து போட்டிகளில் ஹிஜாப் அணிவதை பிபா தடை செய்திருந்தது. தனக்கோ அல்லது மற்றொரு வீரருக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் உபகரணங்களை தடை செய்வதோடு, மூச்சுத் திணறல் ஏற்படுவதற்கான காரணங்களும் இந்த தடைக்கு பின்னணியில் இருந்தது. எனினும், அந்த தடையை 2014ல் பிபா நீக்கியது.