கிங்ஸ் கோப்பை : கடைசி வரை போராடி அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய கால்பந்து அணி
வியாழன் (செப்டம்பர் 7) அன்று தாய்லாந்தின் சியாங் மாயில் உள்ள 700வது ஆண்டு விழா மைதானத்தில் நடந்த கிங்ஸ் கோப்பை 2023 அரையிறுதிப் போட்டியில் ஆடவர் இந்திய கால்பந்து அணி கடைசி வரை போராடி தோல்வியைத் தழுவியது. இந்திய அணி, ஆசிய ஜாம்பவான் ஈராக்கை அரையிறுதியில் எதிர்கொண்டு, ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 90 நிமிட ஆட்டத்தில் பெரும்பகுதியை இந்தியா கட்டுப்படுத்திய நிலையில், கடைசி நேரத்தில் ஈராக் அடித்த ஒரு கோலால் போட்டி சமநிலையில் முடிந்து பெனால்டி ஷூட் அவுட்டிற்கு சென்றது. அதில், ஈராக் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக, இந்தியாவின் நட்சத்திர முன்கள வீரரும் கேப்டனுமான சுனில் சேத்ரிக்கு இந்தப் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டது.