லக்னோ ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கேப்டன் ரிஷப் பண்ட்! ஏகானா மைதானத்தில் உருக்கமான பேச்சு - என்ன நடந்தது?
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரின் தனது கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்வதற்கு முன்பாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சீசனில் லக்னோ அணி தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை முன்கூட்டியே இழந்ததே ரிஷப் பண்டின் இந்த உருக்கமான பேச்சுக்குக் காரணமாகும். கூடுதல் விபரங்கள் இங்கே:-
உருக்கமான பேச்சு
ரிஷப் பண்ட் பேசிய உருக்கமான வார்த்தைகள்
சனிக்கிழமை (மே 23) பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வின் போது பேசிய ரிஷப் பண்ட், இந்த சீசன் தங்களுக்கு மிகவும் கடினமானதாக அமைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொண்டார். "இந்த சீசன் எங்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே நேரத்தில் அணியாகவும் தனிப்பட்ட முறையிலும் இது எங்களுக்குப் பல முக்கியப் பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது" என்று பந்த் கூறினார். "நாடு முழுவதிலும் இருந்தும், முக்கியமாக உத்தரப் பிரதேசம் முழுவதிலும் இருந்தும் மைதானத்திற்கு வந்து எங்களுக்குப் பெரும் ஆதரவளித்த ரசிகர்களிடம் நாங்கள் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறோம்" என அவர் உருக்கமாகத் தெரிவித்தார். மேலும், அடுத்த சீசனில் தவறுகளை திருத்தி மீண்டு வருவோம் என்று உறுதியளித்தார்.
புள்ளிப்பட்டியல்
லக்னோ அணியின் தற்போதைய புள்ளிப் பட்டியல் நிலை
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் லக்னோ அணி 9வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்தினால், லக்னோ அணி மீண்டும் 10வது இடத்திற்கே சரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
அணியில் மாற்றங்கள்
இன்றைய போட்டியில் லக்னோ அணியின் மாற்றங்கள்
சீசனின் தனது கடைசி டாஸை இழந்த ரிஷப் பந்த், ஏகானா மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்றும், இது இந்த சீசனின் அதிக ரன்கள் குவிக்கப்படும் ஒரு போட்டியாக அமையலாம் என்றும் கணித்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த இறுதிப் போட்டிக்கான லக்னோ அணியில் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் அர்ஷின் குல்கர்னி ஆகிய இரு புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பந்த் தெரிவித்தார்.
பின்னடைவு
கடந்த சீசனிலும் லக்னோவின் பின்னடைவு
இந்த 2026 சீசனின் தொடக்கத்தில் முதல் 3 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்ற லக்னோ அணி, ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் தோல்வியடைந்து பிளே-ஆஃப் வாய்ப்பை பறிகொடுத்தது. அதன் பின்னர் மே 7 அன்று பெங்களூரு அணிக்கு எதிராகவும், மே 15 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் தங்களின் 3 மற்றும் 4வது வெற்றிகளைப் பதிவு செய்தனர். ரிஷப் பண்டின் கேப்டன்சியின் கீழ் லக்னோ அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறத் தவறுவது இது முதல் முறையல்ல. கடந்த 2025 சீசனிலும் 14 போட்டிகளில் 6 வெற்றிகளை மட்டுமே பெற்று லக்னோ அணி தொடரை விட்டு வெளியேறியது.