ஐபிஎல் வீரர்களுக்கு செக்! 'ஹனி ட்ராப்' புகார்களைத் தவிர்க்க பிசிசிஐ புதிய உத்தரவு
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வீரர்களின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கத்தைக் கருத்தில் கொண்டு பிசிசிஐ ஏழு பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, வீரர்கள் 'ஹனி-ட்ராப்' எனப்படும் பாலியல் ரீதியான வலைகளில் சிக்கிவிடாமல் இருக்கவும், பாலியல் துன்புறுத்தல் புகார்களில் இருந்து அவர்களை பாதுகாக்கவும் இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகளின்படி, வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகளுக்குள் விருந்தினர்கள் அல்லது வெளியாட்கள் நுழைய பிசிசிஐ தடை விதித்துள்ளது. வீரர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர்களைச் சந்திக்க விரும்பினால், ஹோட்டல் லாபி போன்ற பொதுவான இடங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவசரத் தேவைக்காக ஒருவரை அறைக்குள் அழைக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட அணியின் மேலாளரிடம் இருந்து முறையான எழுத்துப்பூர்வ அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு
வெளியே செல்லும் வீரர்களுக்குக் கண்காணிப்பு
வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக ஹோட்டலை விட்டு வெளியே செல்லும்போது, முன்னதாக அணியின் பாதுகாப்பு அதிகாரி அல்லது நேர்மை அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். வீரர்களின் ஒவ்வொரு அசைவும் துல்லியமாகப் பதிவு செய்யப்படும் என்றும், இந்தப் பதிவேடுகளை பிசிசிஐ அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீரர்களின் பாதுகாப்பில் ஏற்படும் ஓட்டைகளை அடைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
கட்டுப்பாடுகள்
அணி உரிமையாளர்களுக்கும் கட்டுப்பாடுகள்
மைதானத்தின் முக்கியப் பகுதிகளான டக்-அவுட் மற்றும் ட்ரெஸ்ஸிங் ரூம்களுக்குள் அணி உரிமையாளர்கள் மற்றும் மேலாண்மை நிர்வாகிகள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளுக்கிடையிலான (PMOA) விதிமுறைகளை மீறி உரிமையாளர்கள் வீரர்களுடன் உரையாடுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மைதானம் மற்றும் ஹோட்டல் பகுதிகளில் அனைவரும் அடையாள அட்டையை அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் அணிகள் அல்லது வீரர்களுக்குக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் எச்சரித்துள்ளார். இது வெறும் அபராதத்துடன் நிற்காமல், விதிகளை மீறுவோர் தொடரில் இருந்து நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. குறிப்பாகப் பாலியல் புகார்கள் அல்லது தடை செய்யப்பட்ட மருந்துகள் தொடர்பான புகார்கள் எழுந்தால், அவை காவல்துறையின் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.