பெங்களூரு ரசிகர்களுக்கு 'குட் நியூஸ்'! RCB அணி மீண்டும் சின்னசாமி மைதானத்தில் ஆடும்!
செய்தி முன்னோட்டம்
கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தடையை நீக்கி, 2026 ஐபிஎல் தொடருக்கான போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. மைதானத்தில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கமிஷன் நடத்திய ஆய்வில், மைதானம் 'பாதுகாப்பற்றது' எனக் குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக 2025 மகளிர் உலகக்கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பையும் பெங்களூரு இழந்தது. தற்போது அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பொது பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, சில நிபந்தனைகளுடன் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
RCB
RCB-யின் தேடல் முடிவுற்றது
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் இது குறித்துக் கூறுகையில், "டிக்கெட் விற்பனை, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துதல் மற்றும் மைதான நுழைவு வாயில்கள் தொடர்பான விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும்" என உறுதியளித்துள்ளார். மைதான பிரச்சனையால் நவி மும்பை மற்றும் ராய்ப்பூர் ஆகிய நகரங்களை மாற்று இடங்களாக RCB பரிசீலித்து வந்தது. ஆனால், நவி மும்பையில் விளையாட மும்பை இந்தியன்ஸ் (MI) அணி ஆட்சேபனை தெரிவித்தது. தற்போது கர்நாடக அரசின் இந்த அறிவிப்பு, நடப்பு சாம்பியனான RCB-க்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான RCB அணி, கடந்த முறை கோப்பையை வென்றதால், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மற்றும் இறுதி போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.