INDvsAUS 2வது டி20 : ஆஸ்திரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயம் செய்தது இந்தியா
இந்தியா vs ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு இந்தியா 236 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முன்னதாக, திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி பவர்பிளே முடிவில் 77 ரன்கள் குவித்தனர். எனினும் பவர்பிளேயின் முடிவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேற, அடுத்து வந்த இஷான் கிஷானும் 52 ரன்கள் குவித்து வெளியேறினார்.
58 ரன்கள் சேர்த்த ருதுராஜ் கெய்க்வாட்
ஒருமுனையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷான் அவுட்டானாலும், இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடினார். இதற்கிடையே, இஷான் கிஷானுக்கு அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 19 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரிங்கு சிங்கும் அதிரடியாக ஆடிய நிலையில், இன்னிங்சின் கடைசி ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களில் அவுட்டானார். ரிங்கு சிங் கடைசி வரை அவுட்டாகாமல் 31 ரன்கள் சேர்த்ததன் மூலம், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் சிறப்பாக பந்துவீசிய நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.